Last Updated : 09 Sep, 2020 02:04 PM

 

Published : 09 Sep 2020 02:04 PM
Last Updated : 09 Sep 2020 02:04 PM

பிரதமர் பாராட்டிய மதுரை சலூன் கடைக்காரர் பாஜகவில் இணைந்தார்

மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் பாராட்டிய மதுரை சலூன் கடைக்காரர் பாஜகவில் இணைந்தார்.

மதுரையைச் மேலமடையைச் சேர்ந்த சலூன் கடைக்காரர் மோகன். இவர் தனது மகள் நேத்ராவின் படிப்பு செலவுக்காக சேமித்து வைத்திருந்த பணத்தில் கரோனா காலத்தில் பலருக்கு உதவி செய்தார். இவரது செயலை கடந்த மே மாத மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பாராட்டினார்.

இதையடுத்து மோகன் குடும்பத்துடன் மதுரை மாநகர் மாவட்ட பாஜக தலைவர் கே.கே.சீனிவாசன் முன்னிலையில் பாஜகவில் இணைந்ததாக தெரிவிக்கப்பட்டது. இதை மோகன் மறுத்தார்.

அப்போது அவர் கூறும்போது, ‘நான் பாஜகவில் சேரவில்லை. எனக்கு எல்லா கட்சிகளும் நண்பர்கள் உள்ளனர். பாஜகவினர் என்னை வாழ்த்த வந்த வந்தனர். அவர்கள் ஒரு கார்டு கொடுத்தனர். வாழ்த்து அட்டை என நினைத்து வாங்கிக்கொண்டோம்’ என்றார்.

இந்நிலையில் 3 மாதங்களுக்கு பிறகு மோகன், மனைவி மற்றும் மகளுடன் பாஜக மாநில பொதுச் செயலர் சீனிவாசன், மதுரை புறநகர் மாவட்டத் தலைவர் மகா சுசீந்திரன் ஆகியோர் முன்னிலையில் இன்று (புதன்கிழமை) மீண்டும் பாஜகவில் இணைந்தார். அவருக்கு சீனிவாசன் உறுப்பினர் கார்டு வழங்கினார்.

சீனிவாசன் கூறுகையில், "மான்கிபாத் நிகழ்ச்சியில் மோகனை பிரதமர் பாராட்டினார். அப்போது அவர் பாஜகவில் இணைய முன்வந்தார். சிலரின் அச்சுறுத்தல் காரணமாக அவர் பாஜகவில் இணையவில்லை.

இப்போது 300 பேருடன் அவர் பாஜகவில் இணைந்துள்ளார். தமிழகம் முழுவதும் முடி திருத்தும் தொழிலில் உள்ள 6000 பேரை பாஜகவில் இணைக்க அவர் முடிவு செய்துள்ளார் " என்றார்.

மோகன் கூறுகையில், "தமிழகத்தில் பாஜவை பலப்படுத்தவும், பிரதமர் மோடியின் கரத்தை வலுப்படுத்தவும் குடும்பத்துடன் உழைப்போம்" என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x