Published : 09 Sep 2020 09:04 AM
Last Updated : 09 Sep 2020 09:04 AM
திருத்தணியில் உள்ள சுப்ரமணிய சுவாமி கோயிலில் மாதந்தோறும் கிருத்திகையின்போது, வழக்கத்தைவிட அதிகமான பக்தர்கள் தரிசனம் செய்வது வழக்கம். இந்நிலையில், கரோனா அச்சத்தால் கடந்த 5 மாதங்களாக திருத்தணி கோயில் மூடப்பட்டு, பக்தர்கள் தரிசனம் ரத்து செய்யப்பட்டிருந்தது.
தற்போது அரசு அளித்த தளர்வுகள் காரணமாக முக்கிய கோயில்கள், மசூதிகள், தேவாலயங்கள் உள்ளிட்ட வழிப்பாட்டு தலங்கள் கடந்த 1-ம் தேதி திறக்கப்பட்டன.
வழிப்பாட்டுத்தலங்களில் பக்தர்கள் உடல் வெப்ப பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு, முகக்கவசங்கள் அணிந்தவாறு அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இச்சூழலில் நேற்று கிருத்திகையை முன்னிட்டு, மூலவர் முருகனுக்கு பல்வேறு வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் பூஜைகள் நடைபெற்றன. இதில், ஏராளமான பக்தர்கள் மலர் காவடி, பால் காவடி, பன்னீர் காவடி உள்ளிட்ட காவடிகளுடன் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
திருப்போரூர்
செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூரில் உள்ள கந்த சுவாமிகோயிலில் ஆவணி கிருத்திகை நாளான நேற்று, மூலவர் தங்கக் கவசம் அணிந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
சுவாமி தரிசனத்துக்கு வந்திருந்த ஏராளமான பக்தர்கள் எளிமையான முறையில் காவடி சுமந்து சென்று, கோயில் முகப்பு மண்டபம் அருகேதீபாராதனை காட்டி நேர்த்திக்கடனை செலுத்தினர்.
கோயில் நிர்வாகம் பக்தர்கள் வரிசையில் செல்லும் வகையில் சிறப்பான ஏற்பாடுகளை செய்திருந்ததால், கூட்ட நெரிசலின்றி பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT