Published : 09 Sep 2020 08:42 AM
Last Updated : 09 Sep 2020 08:42 AM

குடியிருப்பு பகுதியில் தேங்கி நிற்கும் கழிவுநீர்: செங்கல்பட்டு - வேடந்தாங்கல் சாலையில் மக்கள் மறியல்

மதுராந்தகம் அருகே உள்ளவையாவூர் ஊராட்சியில் 1,000-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். இந்த ஊராட்சியின் முதல்3 தெருக்களில் கழிவுநீர் செல்வதற்கான கால்வாய்கள் சரியாக அமைக்கப்படவில்லை. இதனால் அந்தத் தெருக்களில் கழிவுநீர் தேங்கிபெரும் துர்நாற்றம் வீசுகிறது.

இதுகுறித்து பல்வேறு அதிகாரிகளிடம் முறையிட்டும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று அந்தப் பகுதி மக்கள் குற்றம்சாட்டுகின்றனர். இந்தத் தெருக்களில் 2 அடி உயரத்துக்கு கழிவுநீர், தேங்கி நிற்கும் நிலையில் நோய் பரவும்அபாயத்தை அறியாமல் குழந்தைகள் அந்த நீரில் சென்று விளையாடுவதாக பொதுமக்கள் வேதனையுடன் தெரிவித்தனர்.

இதைத் தொடர்ந்து இந்தப் பகுதியைச் சேர்ந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சினர் கழிவுநீரை வெளியேற்ற வலியுறுத்தி செங்கல்பட்டில் இருந்து வேடந்தாங்கல் செல்லும் சாலையில், மறியலில் ஈடுபட்டனர். மறியலுக்கு மார்க்சிஸ்ட் மாவட்டக் குழு உறுப்பினர் எஸ்.ராஜா தலைமை தாங்கினார். மதுராந்தகம் வட்டச் செயலர்கே.வாசுதேவன், வட்டக் குழு உறுப்பினர்கள் அர்ஜுன் குமார், சசிக்குமார் உட்பட பலர் பங்கேற்றனர்.

பின்னர், மதுராந்தகம் துணை வட்டாட்சியர் கோபி, துணை வட்டாரவளர்ச்சி அலுவலர் ஜெயா ஆகியோர் அங்கு வந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இந்த கிராமத்தில் கழிவுநீர் தேங்காத வகையில் கால்வாய்கள் அமைக்கப்படும், இருக்கும் கால்வாய்கள் தூர்வாரப்படும் என்று அவர் உறுதிஅளித்ததைத் தொடர்ந்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x