

திமுக பொதுக்குழு கூட்டம் காணொலிக் காட்சி மூலம் இன்று கூடுகிறது. இதில் திமுக பொதுச் செயலாளராக துரைமுருகனும் பொருளாளராக டி.ஆர்.பாலுவும் பொறுப்பேற்கின்றனர்.
கரோனா ஊரடங்கால் கடந்தமார்ச் 29-ம் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டு தள்ளிவைக்கப்பட்ட திமுக பொதுக்குழு கூட்டம் காணொலிக் காட்சி மூலம் இன்று காலை 10 மணிக்கு நடைபெறுகிறது. திமுக பொதுச்செயலாளர் பதவிக்கு துரைமுருகனும் பொருளாளர் பதவிக்கு நாடாளுமன்ற திமுக குழுத் தலைவர் டி.ஆர்.பாலுவும் மட்டுமே வேட்புமனு தாக்கல் செய்துள்ளதால் அவர்கள் இருவரும் பொதுக்குழுவில் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டு பொறுப்பேற்க உள்ளனர்.
ஊடகங்களில் விமர்சனம்
சமூக நீதியை உயிர்நாடி கொள்கையாகக் கொண்ட திமுகவில் பட்டியலின சமூகத்தைச் சேர்ந்தவர்கள் பொதுச் செயலாளர், பொருளாளர் பதவிகளுக்கு தேர்ந்தெடுக்கப்படாதது திமுகவுக்கு உள்ளும் வெளியிலும் விவாதப்பொருளாகியுள்ளது. சமூக ஊடகங்களில் திமுக ஆதரவாளர்கள்கூட இதற்காக திமுகவை விமர்சித்து வருகின்றனர்.
எனவே, முன்னாள் மத்திய அமைச்சரும் கொள்கை பரப்புச் செயலாளருமான ஆ.ராசாவுக்கு துணைப் பொதுச்செயலாளர் பதவி வழங்க திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முடிவு செய்துள்ளதாகவும் அதற்கான அறிவிப்புபொதுக்குழுவில் வெளியாகும் என்றும் திமுகவினர் தெரிவிக்கின்றனர்.
கட்சி விதிகளில் திருத்தம்
தற்போது ஐ.பெரியசாமி, சுப்புலட்சுமி ஜெகதீசன், அந்தியூர் செல்வராஜ் ஆகிய 3 பேர் துணைப் பொதுச்செயலாளர்களாக உள்ளனர். 5 பேர் துணைப் பொதுச்செயலாளர்களாகும் வகையில் கட்சி விதிகளில் திருத்தம் செய்யப்பட்டு, ஆ.ராசா, க.பொன்முடி ஆகியோர் துணைப் பொதுச்செயலாளர்களாக நியமிக்கப்பட வாய்ப்பு இருப்பதாகவும் என்றும் கூறப்படுகிறது.
செல்போனுக்கு தடை
பொதுக்குழு கூட்டத்துக்காக மாவட்ட அளவில் அரங்குகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
சென்னை தேனாம்பேட்டையில் உள்ள திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கத்தில் இருந்து ஸ்டாலின், துரைமுருகன், டி.ஆர்.பாலு, கனிமொழி உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். பொதுக்குழுவில் பங்கேற்பவர்கள் அரங்கில் செல்போன் கொண்டுவர தடை விதிக்கப்பட்டுள்ளது.