Published : 09 Sep 2020 07:53 AM
Last Updated : 09 Sep 2020 07:53 AM

ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் மாயமான கரோனா பாதித்த முதியவர் 100 நாட்களாகியும் கிடைக்கவில்லை

சுகாதாரத் துறை ஊழியர்களால் அழைத்துச் செல்லப்பட்ட கரோனா பாதித்த முதியவர், மாயமாகி 100 நாட்கள் கடந்தும் அவர் குறித்த எந்த தகவலும் கிடைக்கவில்லை.

சென்னை ஆலந்தூர் முத்தையா ரெட்டி தெருவைச் சேர்ந்தவர் ஆதிகேசவன்(74). இவருக்கு கடந்த ஜுன் மாதம் 10-ம் தேதி கரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து சென்னை மாநகராட்சியின் சுகாதாரத் துறை ஊழியர்கள் ஆம்புலன்ஸில் ஆதிகேசவனின் வீட்டுக்குச் சென்று அவரை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். மறுநாள் ஆதிகேசவனை பார்க்க அவரது மகன் மணிவண்ணன் (35), கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கு சென்றார். அங்கு சென்று விசாரித்தபோது, ஆதிகேசவன் என்ற பெயரில் யாரும் அனுமதிக்கப்படவில்லை என்று கூறப்பட்டது.

இதுகுறித்து மணிவண்ணன், உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார். நீதிமன்ற உத்தரவை அடுத்து விசாரணையை தொடர்ந்த போலீஸார், வழக்குப்பதிவு செய்து கடந்த ஜுன் மாதம் 30-ம் தேதி ஆதிகேசவனை அழைத்துச் சென்ற ஆம்புலன்ஸ் ஓட்டுநரை கண்டுபிடித்தனர். அவரிடம் விசாரித்ததில் கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் இருந்து ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு ஆதிகேசவனை அழைத்துச் சென்றதாக கூறியுள்ளார்.

ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை வளாகத்தில் அன்றைய தேதியில் பதிவான கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்ததில், ஆதிகேசவன் ஆம்புலன்ஸில் இருந்து இறங்குவதும், அதன் பிறகு அவரை யாரும் சிகிச்சைக்கு அழைத்துச் செல்லாமல் சுமார் 8 மணி நேரம் அங்கேயே காத்திருப்பதும் பதிவாகி இருப்பதாக போலீஸார் தெரிவித்துள்ளனர். ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அவர் மாயமானதால் பூக்கடை போலீஸார் வழக்கை விசாரித்து வருகின்றனர். ஆதிகேசவன் மாயமாகி நேற்றுடன் 100 நாட்கள் கடந்துவிட்ட நிலையில் அவர் குறித்த எந்த தகவலும் இதுவரை கிடைக்கவில்லை. ஆதிகேசவனின் குடும்பத்தினர் அவரை தொடர்ந்து தேடி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x