Published : 09 Sep 2020 07:23 AM
Last Updated : 09 Sep 2020 07:23 AM

இணையதள சேவைகளை மேம்படுத்த, தகவல் பாதுகாப்புக்காக ரூ.96 கோடியில் உருவாக்கப்பட்ட 2-வது தரவு மையம், இணையதளம் காணொலியில் முதல்வர் பழனிசாமி தொடங்கி வைத்தார்

கோப்புப்படம்

சென்னை

அரசு துறைகள், பொதுமக்கள், வணிக நிறுவனங்களுக்கான இணையதள சேவையை மேம்படுத்தவும், தடங்கல் இல்லாத பாதுகாப்பான இணைய சேவையை வழங்கவும் ரூ.96 கோடியில் 2-வது மாநிலதரவு மையம் மற்றும் கணினி அவசரகால பதிலளிப்பு குழுவுக்கான இணையதளத்தை முதல்வர் பழனிசாமி தொடங்கி வைத்தார்.

இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு:

‘அரசு துறைகள் தங்கள் தகவல்தொழில்நுட்பம் சார்ந்த சேவைகளை மக்களுக்கு அதிக அளவில்அளிக்க, தமிழகத்தின் 2-வது மாநிலதரவு மையம் அமைக்கப்படும்’ என்று மறைந்த முன்னாள் முதல்வர்ஜெயலலிதா சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் அறிவித்தார். அதன்படி, சென்னை பெருங்குடியில் உள்ள தமிழ்நாடு மின்னணு நிறுவன வளாகத்தில் ரூ.74.69 கோடியில் அமைக்கப்பட்டுள்ள தமிழகத்தின் 2-வதுஅதிநவீன மாநில தரவு மையத்தை முதல்வர் பழனிசாமி காணொலி மூலம் நேற்று திறந்துவைத்தார்.

195 அடுக்குகள் (ரேக்ஸ்) கொண்ட இந்த தரவு மையம், தமிழகஅரசின் மென்பொருள் பயன்பாடுகள் மற்றும் இதர சேவைகளை பாதுகாப்பான முறையில் பதிவேற்றம் செய்து பயன்படுத்த உதவும்.

மேலும், அரசு துறைகளுக்கு இடையே, அரசுக்கும் பொதுமக்களுக்கும் இடையே, அரசுக்கும் வணிக நிறுவனங்களுக்கும் இடையே இணையதள சேவைகளை வழங்கவும், அரசு துறைகளின்தொழில்நுட்பத் தேவைகளை பூர்த்தி செய்யவும் இந்த மையம் நிறுவப்பட்டுள்ளது.

இணைய பாதுகாப்பு திட்டம்

பேரவையில் 110 விதியின் கீழ்கடந்த 2018 ஜூன் 1-ம் தேதி முதல்வர்பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பில்,‘தமிழக அரசின் தகவல் தொழில்நுட்ப உட்கட்டமைப்புகளான TNSWAN, TNSDC மற்றும் தமிழக அரசால் செயல்படுத்தப்படும் மின்ஆளுமை சேவைகளை, இணையஅச்சுறுத்தல்கள் மற்றும் தடைகளில்இருந்து கண்காணித்து தடங்கல் இல்லாத, பாதுகாப்பான சேவைவழங்கும் பொருட்டு, தமிழகத்துக்கான இணைய பாதுகாப்பு கட்டமைப்பு திட்டம் எல்காட் நிறுவனம் மூலம் ரூ.21.39 கோடியில் செயல்படுத்தப்படும்’ என்று அறிவித்தார்.

இதன் முதல்கட்டமாக, நவீன கணினி உருவாக்க மையம் (Centre for Development of Advanced Computing C-DAC) மூலம் உருவாக்கப்பட்டு, தமிழ்நாடு மின்னணு நிறுவனத்தால் செயல்படுத்தப்பட உள்ள கணினி அவசரகால பதிலளிப்பு குழுவின் (CERT-TN) இணையதளத்தை (https://cert.tn.gov.in) முதல்வர் தொடங்கி வைத்தார். இதன்மூலம் தமிழகத்தின் எல்லா அரசு துறைகளின் கணினி கட்டமைப்புகளை தணிக்கை செய்தல், பாதுகாத்தல், கண்காணித்தல் ஆகிய பணிகளில் இக்குழு முக்கிய பங்கு வகிக்கும்.

இணைய தகவல் பாதுகாப்பு அதிகாரிகளுக்கு பயனுள்ள இணைய பாதுகாப்பு தகவல் மற்றும் கருத்து கேட்பு ஆகிய வசதிகளை வழங்கும் விதத்தில் இந்தஇணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் தடையற்ற இணையவழி சேவைகள், அரசு துறைகளின் தரவுகளின் பாதுகாப்பு உறுதிசெய்யப்படும்.

இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் டி.ஜெயக்குமார், ஆர்.பி.உதயகுமார், தலைமைச் செயலர் கே.சண்முகம், தகவல் தொழில்நுட்பத் துறைசெயலர் ஹன்ஸ்ராஜ் வர்மா, தமிழ்நாடு மின்னணு நிறுவன மேலாண் இயக்குநர் எம்.விஜயகுமார், C-DAC இயக்குநர் பிரகாஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x