Published : 09 Sep 2020 06:32 AM
Last Updated : 09 Sep 2020 06:32 AM

அசோக் லேலண்ட் முன்னாள் தலைவர் ராம் சஹானி சென்னையில் காலமானார்

ராம் சஹானி

சென்னை

அசோக் லேலண்ட் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் ராம் சஹானி (89) நேற்று முன்தினம் சென்னையில் காலமானார்.

ஹிந்துஜா குழுமத்தின் பிரதான நிறுவனமான அசோக் லேலண்டில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி அதன் வளர்ச்சியில் அபரிமிதமான பங்களிப்பை அளித்தவர் ராம் சஹானி. இவரது தலைமையின்கீழ் நிறுவனம் பல மடங்கு வளர்ச்சியை எட்டியதோடு இந்தியாவில் அதிகளவில் பயன்படுத்தப்படும் லாரிகள் தயாரிப்பு மற்றும் பஸ் தயாரிப்பில் பிரதான நிறுவனமாகவும் அசோக் லேலண்ட் வளர்ச்சி அடைந்தது.

கொல்கத்தாவைச் சேர்ந்த ஜெஸோப் அண்ட் கோ நிறுவனத்தில் இருந்து விலகி அசோக் லேலண்ட் நிறுவனத்தில் முதலாவது நிர்வாக இயக்குநராக 1978-ம் ஆண்டு சஹானி பொறுப்பேற்றார்.

வாகனங்களில் ஏர் பிரேக் மற்றும் பின்புறம் இன்ஜின் பொருத்துவது உள்ளிட்ட பல புதுமைகளை புகுத்தியவர். பல தரப்பு மக்களின் தேவைகளுக்கேற்ப பல்வேறு ரகங்களில் வாகனங்களை அறிமுகப்படுத்தியவர். இவரது தலைமையின் கீழ் ஹினோ மோட்டார்ஸ் மற்றும் இஸட்எப் நிறுவனங்களுடன் அசோக் லேலண்ட் ஒப்பந்தம் செய்தது.

சரக்கு போக்குவரத்து வாகனங்கள் தயாரிக்கும் நிறுவனங்கள் அதற்கென விற்பனைக்குப் பிந்தைய சேவை மையங்களையும் உருவாக்கி இத்துறையில் புதுமையை புகுத்தியவர் சஹானி.

ஓசூர், பாந்த்ரா, ஆல்வார் ஆகிய பகுதிகளில் உற்பத்தி ஆலை அமைத்ததில் மிக முக்கிய பங்கு சஹானிக்கு உண்டு. இந்தியாவுக்கு வெளியேயும் லேலண்ட் வாகனங்களை பிரபலப்படுத்தியவர். இந்திய ராணுவத்தில் லேலண்ட் வாகனங்கள் அதிகம் பயன்படுத்தப்படுவதில் இவரது அணுகுமுறையும், ராணுவத் தேவைக்கேற்ப வாகன வடிவமைப்பை உருவாக்கிய விதமும் முக்கிய காரணங்களாகும். ராணுவத்துக்கு அதிக வாகனங்களை சப்ளை செய்யும் நிறுவனமாக இன்றளவும் அசோக் லேலண்ட் திகழ்கிறது.

எந்த சந்தர்ப்பத்திலும் நிதானம் தவறாமல் பிரச்சினைகளைக் கையாளும் திறமை கொண்டவர். ஒரு சமயம் நிறுவன இயக்குநர் கூட்டத்தில் ஒரு முதலீட்டாளர், நிர்வாகிகள் நிறுவனத்தை சுரண்டுவதாக குற்றம் சாட்டினார். அப்போது நிதானம் தவறாமல் அவரது கருத்து தவறானது என்று குறிப்பிட்டார் சஹானி. கூட்டம் முடிந்த பிறகு குற்றம் சாட்டிய முதலீட்டாளர் தோளில் கைபோட்டு பேசியபடி சென்றதை நிறுவனத்தை சேர்ந்தவர்களே குறிப்பிட்டனர்.

டுகாடி நிறுவனத்துடன் சேர்ந்து கார் தயாரிப்பில் ஈடுபட நிறுவனம் திட்டமிட்டு பின்னர் அது கைவிடப்பட்டது. கார் தயாரிப்பில் நிலவிய போட்டியை உணர்ந்து சஹானி எடுத்த முடிவு மிகச் சரியானது என்பது பின்னர் நிறுவனமே உணர்ந்தது.

சிஐஐ உட்பட பல்வேறு தொழில் வர்த்தகம் சார்ந்த சம்மேளனங்களில் முக்கிய பொறுப்பை வகித்துள்ளார். ஆட்டோமொபைல் துறையில் மிக முக்கியமான பங்களிப்பை அளித்தவர் சஹானி என்று சுந்தரம் பாசனர்ஸ் நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா குறிப்பிட்டுள்ளார்.ராம் சஹானி

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x