Published : 08 Sep 2020 08:28 PM
Last Updated : 08 Sep 2020 08:28 PM

அசோக் லேலண்ட் நிறுவனத்தின் 'சாலை டூ பள்ளி' திட்டம்: கூடுதலாக 178 பள்ளிகளில் தொடக்கம்

ஹிந்துஜா குழுமத்தின் முதன்மை நிறுவனமாகவும், இந்தியாவின் முன்னணி வர்த்தக வாகன உற்பத்தியாளராகவும் விளங்கும் அசோக் லேலண்ட், தனது சமூகப் பொறுப்புணர்வு முயற்சியின் (சிஎஸ்ஆர்) கீழ் செயல்படுத்தி வரும் 'சாலை டூ பள்ளி' (Road to School - RTS) திட்டத்தில் நாமக்கல், கிருஷ்ணகிரி மாவட்டங்களிலுள்ள 178 பள்ளிகளைக் கூடுதலாக இணைத்துக் கொண்டுள்ளதாக அறிவித்துள்ளது.

இந்தக் குழந்தைகள் மேம்பாட்டுத் திட்டமானது, கூடுதலாக 11,042 குழந்தைகளுக்குப் பலன் அளிக்கும். அசோக் லேலண்டின் மனிதவளம், சிஎஸ்ஆர் & கம்யூனிகேஷன் தலைவர் என்.வி.பாலசந்தர் இந்நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தார். கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் ஜெயசந்திர பானு ரெட்டி, கிருஷ்ணகிரி மாவட்டத் தலைமைக் கல்வி அலுவலர் முருகன், கிருஷ்ணகிரி மாவட்ட சாமகரசிக்ஷா உதவி திட்ட அலுவலர் டி.எஸ். நாராயணா, அசோக் லேலண்ட் துணைத் தலைவர் – மனிதவளம் & சிஎஸ்ஆர் டி. சசிகுமார், லேர்னிங் லிங்க்ஸ் அறக்கட்டளை திட்ட இயக்குனர் எஸ். கிரிஷ் உட்படப் பலர் இதில் கலந்துகொண்டனர்.

இந்த நிகழ்வு பற்றிப் பேசிய என்.வி.பாலசந்தர், “ரோட் டூ ஸ்கூல் திட்டமானது பல இளம் மாணவர்களின் வாழ்க்கையைச் சிறப்பான முறையில் மாற்றும் ஒரு திட்டமாக அமைந்துள்ளது. இதில் பங்கேற்ற மாணவர்களிடம் கண்ட நேர்மறையான மாற்றங்கள் எங்களைப் பெருமைப்பட வைத்துள்ளன. வாசிப்புத் திறன் 35% அதிகரிப்பதிருப்பதும், கல்வியைக் கற்காமல் இடைநிற்றல் செய்வது 20% வரை குறைந்திருப்பதும் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களாக அமைந்திருப்பதோடு எங்களது சாதனைகளாகவும் உருவெடுத்துள்ளன.

இது போன்ற பல அளவீடுகள், நாங்கள் சரியான பாதையில் செல்வதை நிரூபித்துள்ளது. ஆனால், கல்வி மற்றும் சமூகச் செயல்பாடுகள் மூலமாக இளம் குழந்தைகள் செழிப்படைய உதவும்போது எங்களுக்கு உண்டாகும் மகிழ்ச்சியையும் திருப்தியையும் கண்டிப்பாக அளவிட முடியாது. இன்று, கூடுதலாக 178 பள்ளிகளும் அதன் மூலமாக 11,042 மாணவர்களும் எங்களது திட்டத்தினால் பலன் பெறவுள்ளனர். இது எங்களது முயற்சியை மேலும் வலுவாக்கியுள்ளது. சமூகத்தில் எப்படிப்பட்ட தாக்கம் ஏற்பட வேண்டுமென்று விரும்பினோமோ, அதனை விரிவாக்கியுள்ளது. வரவிருக்கும் புதிய மாணவர்களை எதிர்நோக்கியிருக்கிறோம். அவர்களது வாழ்விலும் முத்திரை பதிப்போம் என்று நம்புகிறோம்” எனத் தெரிவித்தார்.

கரோனா நோய்த் தொற்றின்போது, இந்த மக்கள் இயக்கம் பெரும் சவாலை எதிர்கொண்டது. அசோக் லேலண்டில் இருந்த குழு அதனை ஒரு வாய்ப்பாகக் கருதி, ‘ஐகேர்’ (iCare) முயற்சியைத் தொடங்கி டிஜிட்டல் தளங்களை நோக்கி விரைவாக நகர்ந்தது. லேர்னிங் லிங்க்ஸ் அறக்கட்டளை மற்றும் ஹிந்துஜா குழுமத்தின் 11 நிறுவனங்களைச் சார்ந்த 598 தன்னார்வலர்கள் உதவியுடன், கல்வியில் இருந்து எந்தவொரு குழந்தையும் விலக்கப்படவில்லை என்பதை உறுதிப்படுத்தியது.

குழந்தைகளுக்கான சிறப்புச் சேவையாளர்கள், தன்னார்வலர்கள் தொடர்ச்சியாக ஆன்லைன் மூலமாகவும் நேரடியாகவும் சென்று மாணவர்களை ஊக்கப்படுத்தி வருகின்றனர். பள்ளிசார் கல்வி, ஆரோக்கியம் & உடல்திறன், தகவல் தொடர்புத் திறன், கைவினைத் திறன் தொடர்பான பல்வேறு செயல்பாடுகளை மேற்கொள்ளச் செய்கின்றனர்.

ரோட் டூ ஸ்கூல் திட்டம்

2015-ம் ஆண்டு தமிழ்நாட்டின் கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள அஞ்செட்டி, சூலகிரி பகுதியில் 36 பள்ளிகளில் இந்தத் திட்டம் தொடங்கப்பட்டது. இதன் வெற்றியானது, இந்நிறுவனத்தை மேலும் பல மாவட்டங்களில் பரப்பத் தூண்டுதலாக அமைந்தது. இதையடுத்து தமிழ்நாட்டிலுள்ள திருவள்ளூர் (மீஞ்சூர், புழல்), நாமக்கல் (மோகனூர், பரமத்தி, எருமப்பட்டி, கொல்லிமலை), கிருஷ்ணகிரி (சூலகிரி, அஞ்செட்டி, தளி, கேளமங்கலம்) ஆகிய மாவட்டங்களில் உள்ள அரசு ஆரம்பப் பள்ளிகள், நடுநிலைப் பள்ளிகளில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டது.

இதனால், 714 பள்ளிகளில் சுமார் 55,000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் இன்று பயனடைந்து வருகின்றனர். இந்தத் திட்டமானது போக்குவரத்து வசதியற்ற இடங்களில் செயல்படும் அரசுப் பள்ளிக் குழந்தைகளின் பள்ளிக் கல்வி மற்றும் இணைக் கல்வி வளர்ச்சிக்கு உதவுகிறது. கல்வி, ஆரோக்கியம், தனிநபர் சுகாதாரம், உடல்நலம், ஊட்டச்சத்துகள் மற்றும் விளையாட்டு, இசை உள்ளிட்ட உணர்வுபூர்வமான வளர்ச்சி ஆகியவற்றை இத்திட்டம் உள்ளடக்கமாகக் கொண்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x