Last Updated : 08 Sep, 2020 03:19 PM

 

Published : 08 Sep 2020 03:19 PM
Last Updated : 08 Sep 2020 03:19 PM

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் சங்கத்தினர் முற்றுகைப் போராட்டம்

காப்பீடு செய்துள்ள அனைத்து விவசாயிகளுக்கும் பயிர்க்காப்பீட்டு இழப்பீட்டுத் தொகையை வழங்கக் கோரி டெல்டா மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் முன்பாக இன்று விவசாயிகள் சங்கத்தினர் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

2019- 20 ஆம் ஆண்டில் பயிர்க் காப்பீடு செய்துள்ள அனைத்து விவசாயிகளுக்கும் இழப்பீட்டுத் தொகை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தின் சார்பில் திருவாரூர், நாகப்பட்டினம், தஞ்சாவூர், மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் முன்பாக இன்று முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது.

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தின் பொதுச் செயலாளர் பி.ஆர்.பாண்டியன் தலைமையில் முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது. 2019- 20 ஆம் ஆண்டுக்கான பயிர்க் காப்பீடு செய்து தற்போது இழப்பீட்டுத் தொகை அறிவிக்கப்படாமல் உள்ள 916 வருவாய் கிராமங்களுக்கும் பாரபட்சமில்லாமல் உடனடியாக இழப்பீட்டுத் தொகையை வழங்கிட வேண்டும், தன்னிச்சையான போக்கில் பாரபட்சமாகச் செயல்பட்டு ஊழல் முறைகேட்டில் ஈடுபடும் காப்பீட்டு நிறுவன அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், ஆண்டுதோறும் அறுவடை ஆய்வறிக்கையை மாவட்ட ஆட்சியர் ஒப்புதல் பெற்று இழப்பீடு இறுதி செய்யப்பட வேண்டும், பல ஆண்டுகளாக ஒரே பகுதியில் பணியாற்றும் உதவி வேளாண் அலுவலர்களைப் பணி மாறுதல் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

இதேபோல மற்ற மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் முன்பாக நடைபெற்ற முற்றுகைப் போராட்டத்தில் ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x