Last Updated : 08 Sep, 2020 02:01 PM

 

Published : 08 Sep 2020 02:01 PM
Last Updated : 08 Sep 2020 02:01 PM

ஜெயராஜ், பென்னிக்ஸ் மீது பொய் வழக்குகள் பதியப்பட்டே நடவடிக்கை எடுக்கப்பட்டது: உயர் நீதிமன்றத்தில் சிபிஐ தகவல்

ஜெயராஜ், பென்னிக்ஸ் மீது பொய்யான வழக்குகள் பதியப்பட்டே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் சிபிஐ தெரிவித்துள்ளது.

சாத்தான்குளம் தந்தை-மகன் உயிரிழந்த விவகாரத்தில் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் சிறையில் உள்ளார். அவர் ஜாமீன் கோரி, உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுவினைத் தாக்கல் செய்துள்ளார்.

அதில், "சாத்தான்குளத்தில் தந்தை ஜெயராஜ், மகன் பென்னிக்ஸ் உயிரிழந்த விவகாரம் தொடர்பாகக் கைது செய்யப்பட்டு தற்போது வரை சிறையில் இருக்கிறேன். உயர் நீதிமன்ற மதுரைக் கிளையின் உத்தரவின்படி சிபிசிஐடி காவல்துறையினர் வழக்கை விசாரித்த நிலையில் தற்போது சிபிஐ காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

வழக்குத் தொடர்பான ஆவணங்களை ஏற்கெனவே தடய அறிவியல் துறை அதிகாரிகள் சேகரித்துவிட்ட நிலையில் விசாரணையும் முடிவடைந்து உள்ளது. எனக்கு ஜாமீன் வழங்கும் பட்சத்தின் தலைமறைவாக மாட்டேன் என்றும், நீதிமன்றம் வகுக்கும் கட்டுப்பாடுகளுக்குக் கட்டுப்படுவேன் என்றும் உறுதி கூறுகிறேன். ஆகவே, இந்த வழக்கில் ஜாமீன் வழங்கி உத்தரவிட வேண்டும்" எனக் கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதி பாரதிதாசன் முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில்," சம்பவம் நிகழ்ந்த அன்று கரோனா பணியாக ஸ்ரீதர் வெளியே சென்றிருந்ததால், காவல் நிலையத்தில் இல்லை. ஜெயராஜ், பென்னிக்ஸ் தாக்கப்பட்டதற்கும், ஸ்ரீதருக்கும் எவ்வித தொடர்பும் இல்லை. சிபிஐ காவல் துறையினர் எவ்வித விசாரணையையும் மேற்கொள்ளாமல், முதல் தகவல் அறிக்கையைப் பதிவு செய்துள்ளனர். அவருக்கு முதுகெலும்புப் பிரச்சனை இருப்பதால், உடல் நலத்தைக் கருத்தில் கொண்டு ஜாமீன் வழங்க வேண்டும்" என வாதிட்டார்.

சிபிஐ தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், "இந்த வழக்குத் தொடர்பாக 45 பேரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஜெயராஜ், பென்னிக்ஸ் மீது பொய்யான வழக்குகள் பதியப்பட்டே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தற்போது ஜாமீன் வழங்கினால் அவர் சாட்சிகளைக் கலைக்க வாய்ப்புள்ளது" எனத் தெரிவித்தார்.

இவற்றைப் பதிவு செய்துகொண்ட நீதிபதி, வழக்கின் விசாரணை அதிகாரி, வழக்கு தொடர்பான வழக்கு விசாரணைக் குறிப்பை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய உத்தரவிட்டு, வழக்கின் தீர்ப்பினை வெள்ளிக்கிழமைக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x