Published : 08 Sep 2020 01:56 PM
Last Updated : 08 Sep 2020 01:56 PM

25% கட்டாயக் கல்வி உரிமை சட்டம், காலி இடங்கள் அட்டவணை; உடனடியாக நாளிதழில் விளம்பரப்படுத்த வேண்டும்: உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை

ஏழை மாணவர்களுக்காக கொண்டுவரப்பட்ட 25% கட்டாய இலவசக் கல்விக்கான இடங்கள் அட்டவணையை அரசு வெளியிடக்கோரிய வழக்கில் உடனடியாக நாளிதழில் விளம்பரப்படுத்த வேண்டும், இடங்கள் நிரப்பப்பட்டப்பின் காலியாக உள்ள இடங்களை பள்ளிவாரியாக வெளியிட உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

6 முதல் 14 வயதுடையவர்களுக்கு கட்டாய இலவச கல்வி கிடைப்பதற்காக கொண்டு வரப்பட்ட கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் அடிப்படையில், சிறுபான்மை அல்லாத பள்ளிகளில் உள்ள மாணவர் சேர்க்கைக்கான இடங்களில் ஒவ்வொரு ஆண்டும் 25 சதவிகிதம் ஒதுக்கப்படுகிறது. அதற்கான மாணவர் சேர்க்கை ஏப்ரல் 2-ம் தேதி தொடங்கி மே 29-ம் தேதியுடன் முடிவடைகிறது.

ஆனால் இந்த ஆண்டு கரோனா தாக்கத்தால் அந்த நடைமுறை கேள்விக்குறியாகி உள்ள நிலையில், இதுதொடர்பாக பாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் சார்பில் அதன் மாநில செயலாளர் ஜெ. முகம்மது ரசின் பொது நல மனுத் தாக்கல் செய்துள்ளார்.

அவரது மனுவில், “கரோனா தாக்கத்தால் கடந்த மார்ச் மாதம் இறுதியிலிருந்தே பள்ளிகள் மூடப்பட்டு, எப்போது திறக்கப்படும் என முடிவெடுக்கப்படாத நிலை உருவாகி உள்ளது. இந்த ஆண்டு கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ் உள்ள இடங்கள் எவ்வாறு நிரப்பப்படும் என தமிழக அரசு இதுவரை எந்த அறிவிப்போ அல்லது தெளிவுபடுத்துதலையோ வழங்கவில்லை.

தனியார் பள்ளிகள் ஆன்லை மூலம் வகுப்புகளை தொடங்கி உள்ளதும், கல்வி கட்டணத்தில் 40 சதவிகிதத்தை வசூலிக்கலாம் என ஜூலை 17-ம் தேதி உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவும் கட்டயா கல்வி உரிமை சட்டத்தில் இடம் கிடைக்கும் என நம்பியுள்ள பெற்றோரை சிரமத்தில் ஆழ்த்தி உள்ளது.

எனவே கட்டாய கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ் ஒதுக்கப்பட்டுள்ள 25 சதவிகித இலவச மாணவர் சேர்க்கை இடங்கள் நிரப்புவதற்கான நடைமுறைகளையும், கால அட்டவணையையும் தமிழக அரசு வெளியிட உத்தரவிட வேண்டும், அவற்றை பொதுமக்கள் தெரிந்துகொள்ளும் வகையில் விளம்பரபடுத்த வேண்டும்.

நுழைவு நிலை வகுப்புகளான எல்.கே.ஜி. மற்றும் ஒன்றாம் வகுப்பு இடங்களில் 25 சதவிகித இடங்களை ஒதுக்கிவைக்கும்படி உத்தரவிட வேண்டும்”. என கோரிக்கை வைத்துள்ளார்.

இந்த மனு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ் மற்றும் ஆர்.ஹேமலதா அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு தரப்பில் கட்டாய கல்வி உரிமை இடங்களுக்கான கால அட்டணவனை வெளியிடப்பட்டுள்ளது, ஆகஸ்ட் 27 முதல் செப்டம்பர் 25 விண்ணப்பிகலாம் என தெரிவிக்கப்பட்டது.

அரசின் அறிவிப்பு மக்களிடம் சென்றடையவில்லை என மனுதாரர் தரப்பில் குற்றம்சாட்டப்பட்டது. அதனை பதிவு செய்த நீதிபதி, அரசின் கால அட்டவணையை தலா ஒரு தமிழ் மற்றும் ஆங்கில நாளிதழ்களில் வெளியிட வேண்டும் எனவும், அந்த அறிவிப்பில் இந்த மாணவர் சேர்க்கையை கண்காணிக்கும் குழுவின் அதிகாரிகள் குறித்த விவரங்களையும் வெளியிட வேண்டுமென அரசுக்கு உத்தரவிட்டனர்.

கட்டாய கல்வி உரிமைகள் சட்ட இடங்களில் வேறு மாணவர்களை நிரப்பக்கூடாது எனவும், நிரப்பப்படாத இடங்களின் விவரங்களை பள்ளிவாரியாக வெளியிட வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x