

சமூக நீதிக்கு எதிரான புதிய கல்விக் கொள்கையை தீவிரமாக செயல்படுத்த, மத்திய அரசு பல்கலைக் கழகங்களில் தனது ஆதரவாளர்களை திணித்து வருவதன் அடையாளம்தான், பாரதியார் பல்கலைக் கழக ஆட்சி மன்ற உறுப்பினர் நியமனம் என முத்தரசன் விமர்சித்துள்ளார்.
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் இன்று வெளியிட்ட அறிக்கை:
“கோவை பாரதியார் பல்கலைக் கழகத்தின் ஆட்சி மன்றக் குழு (சிண்டிகேட்) உறுப்பினராக, பாஜக மாநிலத் துணைத் தலைவர் நியமிக்கப் பட்டிருக்கார். சமூக நீதிக்கு எதிரான புதிய கல்விக் கொள்கையை தீவிரமாக செயல்படுத்த, மத்திய அரசு பல்கலைக் கழகங்களில் தனது ஆதரவாளர்களை திணித்து வருவதன் அடையாளம்தான், பாரதியார் பல்கலைக் கழக ஆட்சி மன்ற உறுப்பினர் நியமனமாகும்.
ஆளுநர் மூலம் நடைபெற்றுள்ள இந்த நியமனத்திற்கு, கல்வியாளர்கள் பலத்த எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ஆட்சி மன்றக் குழு உறுப்பினர் நியமனத்திற்கு அரசு பரிந்துரை செய்ததா? அதன்படி தான் உறுப்பினர் நியமனம் செய்யப்பட்டாரா? இல்லையெளில் ஆளுநர் மாநில அரசின் ஆலோசனைகளையும், பரிந்துரைகளையும் நிராகரித்து செயல்படுகிறரா? என்பது போன்ற பல வினாக்கள் எழுகின்றன.
இந்தச் சூழலில் கனகசபாபதியின் நியமனத்தை ரத்து செய்ய வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு தமிழக ஆளுநரை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது”.
இவ்வாறு முத்தரசன் தெரிவித்துள்ளார்.