Published : 08 Sep 2020 12:13 PM
Last Updated : 08 Sep 2020 12:13 PM

தி.மலை மாவட்டத்தில் இருந்து வெளி மாவட்டங்களுக்கு அரசு பேருந்துகள் இயக்கம்: விதிகளை பின்பற்ற முடியாமல் திணறல்

தி.மலை மாவட்டத்தில் இருந்து வெளி மாவட்டங்களுக்கு நேற்று பேருந்துகள் இயக்கப்பட்டன.

கரோனா ஊரடங்கு காரண மாக கடந்த 5 மாதங்களாக பொது போக்குவரத்து முடக்கப் பட்டிருந்தது. இதனால், தி.மலை மண்டல அரசுப் போக்குவரத்துக் கழகத்துக்கு உட்பட்ட 10 பணிமனைகளில் உள்ள 550 பேருந்துகள் இயக்கப்படவில்லை.

இந்நிலையில், மாவட்டங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் அரசு மற்றும் தனியார் பேருந்துகளை கடந்த 1-ம் தேதி முதல் இயக்க தமிழக அரசு அனுமதித்தது. அதன்படி, தி.மலை மாவட்டத்தில் 50 சதவீத பேருந்துகள் இயக்கப் பட்டன. இதன் தொடர்ச்சியாக மாவட்டங்களுக்கு இடையேயான பேருந்து சேவை, 7-ம் தேதி முதல் மீண்டும் தொடங்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது. இதையடுத்து, தி.மலை மண்டல அரசுப் போக்குவரத்துக் கழகம் சார்பில் 75 சதவீத பேருந்துகள் நேற்று முதல் இயக்கப்பட்டன.

கோவையில் இருந்து சென்னைக்கு இயக்கப்பட்ட சிறப்பு பயணிகள் ரயில் நேற்று காலை காட்பாடிக்கு வந்தடைந்தது.

தி.மலை மாவட்டத்தில் இருந்து வேலூர், விழுப்புரம், காஞ்சிபுரம், சேலம், தருமபுரி, கடலூர், கிருஷ்ணகிரி, சென்னை உட்பட பல்வேறு மாவட்டங்களுக்கு பேருந்துகள் இயக்கப்பட்டன. கிராம பகுதிகளுக்கான பேருந்து இயக்கம் குறைவாக இருந்தது. நகர பேருந்துகளின் இயக்கம் கணிசமாக இருந்தது. தனியார் பேருந்துகள் இயக்கப்படாத காரணத்தால், அரசுப் பேருந்துகளில் பயணிகள் கூட்டம் அதிக மாக இருந்தது.

பேருந்துகள் புறப்படும் இடத்தில் இருந்து மட்டுமே விதிகள் பின்பற்றப்படுகிறது. வழியில் உள்ள நிறுத்தங்களில் இருந்து ஏறும் பயணிகளுக்கு சானிடைசர் வழங்குவதில்லை.சமூக இடைவெளியை பின்பற்றி இயக்கவும் முடியாத நிலை உள்ளது. கரோனா தொற்று பரவலை தடுக்க அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கட்டாயம் பின்பற்ற அரசுப் போக்குவரத்துக் கழகம் முன்வர வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x