Published : 08 Sep 2020 10:49 AM
Last Updated : 08 Sep 2020 10:49 AM

மாநகராட்சியை கிண்டல் செய்து பேனர் வைத்தவர் மீது வழக்கு

கோவை

கோவை ஹோப்காலேஜ் பகுதியைச் சேர்ந்த இளைஞர், தனது குடும்பத்தினருக்கு தனியார் ஆய்வகத்தில் மேற்கொண்ட பரிசோதனையில் கரோனா இல்லை என முடிவுகள் வந்த நிலையிலும், கரோனா இருப்பதாக மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்ததாகக் கூறி, மாநகராட்சியை கிண்டல் செய்யும் வகையில் தனது வீட்டின் முன் ஃபிளக்ஸ் பேனர் வைத்திருந்தார். இது சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவியது.

இதுகுறித்து மாநகராட்சி சார்பில் நேற்று வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில், "சம்பந்தப்பட்ட நபரின் மனைவிக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு, கொடிசியா மையத்தில் சிகிச்சை பெற்று, பின்னர் வீடு திரும்பியுள்ளார். இதையடுத்து, அவர்களது குடும்பத்தினர் 14 நாட்கள் வெளியில் செல்ல தடை விதிக்கப்பட்டது. ஆனால், தடையை மீறி அந்த நபர் தனது தந்தையை வேடப்பட்டியிலிருந்து வீட்டுக்கு அழைத்து வந்துள்ளார். பின்னர், அவரது தந்தை உடல்நிலை பாதிக்கப்பட்டு, உயிரிழந்தார். பின்னர், அப்பகுதியில் மருத்துவ முகாம் நடத்தப்பட்டதில், அவரது மனைவி, 2 மகள்கள், தாய் ஆகியோருக்கு கரோனா உறுதியானது. மாநகராட்சி அறிவுறுத்தியும், மருத்துவமனைக்கு செல்லாமல், வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டனர்.

மேலும், கடந்த 4-ம் தேதி தனியார் ஆய்வகத்தில் பரிசோதனை செய்து, கரோனா இல்லை என்று சான்று பெற்றுள்ளனர். பின்னர், மாநகராட்சியை கண்டித்து பேனர் வைத்துள்ளனர். நோய் பரப்பும் வகையில் செயல்பட்டதாக அவர் மீது சிங்காநல்லூர் காவல் நிலையத்தில் மாநகராட்சி அதிகாரிகள் புகார் அளித்து, வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாநகராட்சி சுகாதாரத் துறை அதிகாரி அளித்த புகாரின் பேரில், சம்பந்தப்பட்ட இளைஞர் மற்றும் அவரது மனைவி மீது, மூன்று பிரிவுகளில் போலீஸார் வழக்கு பதிவு செய்து, விசாரித்து வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x