Published : 08 Sep 2020 08:52 AM
Last Updated : 08 Sep 2020 08:52 AM

டி-சர்ட் தமிழ் வளர்ந்ததாக சரித்திரம் இல்லை: வானதி சீனிவாசன் விமர்சனம்

திருப்பூர்

டி-சர்ட்டில் எழுதினால் மட்டும் தமிழ் வளராது என்று, பாஜக மாநில துணைத் தலைவர் வானதி சீனிவாசன் விமர்சித்துள்ளார்.

பிரதமர் கிசான் உதவித் திட்டத்தில் முறைகேட்டில் ஈடுபடுவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி திருப்பூர் ஆட்சியரிடம், பாஜக மாநில துணைத் தலைவர் வானதி சீனிவாசன் நேற்று மனு அளித்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: இந்தி திணிப்பை மத்திய அரசு செய்யவில்லை. திணிப்பு தவறு என்பதை பாஜக ஒப்புக்கொள்கிறது. மும்மொழிக் கொள்கை என்பது ஏதேனும் ஒரு மொழியை கற்பதற்கான வாய்ப்பு. அரசுப் பள்ளிகளில் பயிலும் ஏழை மாணவர்கள்தான், இரு மொழியைக் கற்கின்றனர். ஏழைக் குழந்தைகளும் மூன்றாம் மொழியை கற்க வேண்டும் என்பதே எங்கள் கருத்து. ஆனால், திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் டி-சர்ட் மூலமாக இந்தி படிக்கமாட்டோம் என பரப்புகின்றனர். உங்களுக்கு விருப்பம் இல்லாவிட்டால் படிக்க வேண்டாம்.

திமுகவை சேர்ந்தவர்களின் குடும்பக் குழந்தைகள் எத்தனை பேர் இந்தி மொழி படிக்காமல் இருக்கிறார்கள்? திமுகவினர் நடத்தும் எந்தெந்த பள்ளிகளில் மூன்றாம் மொழி கற்பிக்கப்படுகிறது என்பது தெரியும்.

தாய்மொழியில் கல்வி கற்க வேண்டும் என்பதே புதிய கல்விக் கொள்கை. 5-ம் வகுப்பு வரை கட்டாயம் தமிழில்தான் கற்க வேண்டும். டி-சர்ட்டில் எழுதினால் மட்டும் தமிழ் வளராது. பள்ளிகளில் தமிழை கற்றுக்கொடுக்க ஏற்பாடு செய்யுங்கள். அதை நாங்கள் வரவேற்கிறோம். டி-சர்ட் தமிழ் வளர்ந்ததாக சரித்திரம் இல்லை. தமிழுக்கு ஆக்கப்பூர்வமாக எதையாவது செய்யுங்கள் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x