பேருந்துகளில் ரூ.5 கட்டணம் செலுத்தி நடத்துநரிடம் முகக்கவசம் பெறலாம்

பேருந்துகளில் ரூ.5 கட்டணம் செலுத்தி நடத்துநரிடம் முகக்கவசம் பெறலாம்

Published on

பேருந்துகளில் பயணம் செய்ய வரும் முகக்கவசம் இல்லாத பயணிகள், ரூ.5 கட்டணம் செலுத்தி நடத்துநரிடம் முகக்கவசம் பெற்றுகொள்ளலாம் என போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

தமிழகத்தில் மாநிலம் முழுவதும் மாவட்டங்களுக்கு இடையேயான அரசுப் பேருந்து போக்குவரத்து சேவை நேற்று தொடங்கப்பட்ட நிலையில், கரூர் பேருந்து நிலையத்தில் செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்த அவர், பின்னர் செய்தியாளர்களிடம் கூறியது:

கரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் பின்பற்றி மாநிலம் முழுவதும் மாவட்டங்களுக்கு இடையேயான அரசுப் பேருந்து போக்குவரத்து சேவை தொடங்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு ஏற்பாடாக அனைத்து பேருந்துகளிலும் சானிடைசர் வசதி செய்யப்பட்டுள்ளது.

ஓட்டுநர், நடத்துநர்களுக்கு முகக்கவசம், கையுறை மற்றும் ஃபேஸ் ஷீல்டு ஆகியவை வழங்கப்பட்டுள்ளன. மேலும், பயணிகளின் தேவைக்காக நடத்துநரிடம் முகக்கவசங்கள் வழங்கப்பட்டுள்ளன. முகக்கவசம் இல்லாமல் வரும் பயணிகள், நடத்துநரிடம் ரூ.5 கட்டணம் செலுத்தி முகக்கவசம் பெற்றுக் கொள்ளலாம்.

அரசின் வழிகாட்டு விதிமுறைகளுக்கு உட்பட்டு தனியார் பேருந்துகளை இயக்கலாம் என்றார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in