Published : 08 Sep 2020 08:11 AM
Last Updated : 08 Sep 2020 08:11 AM
கரோனா ஊரடங்கு காரணமாக கடந்த 5 மாதங்களாக மூடப்பட்டு இருந்த சென்னை உயர் நீதிமன்றம் நேற்று முதல் சோதனை ரீதியாகதிறக்கப்பட்டது. அமர்வு நீதிமன்றங்களும் செயல்படத் தொடங்கின.
கரோனா ஊரடங்கு காரணமாக சென்னை உயர் நீதிமன்றம், உயர் நீதிமன்ற மதுரை கிளை மற்றும் தமிழகம், புதுச்சேரியில் உள்ள கீழமை நீதிமன்றங்கள் கடந்த மார்ச் 25-ம் தேதி முதல் காலவரையின்றி மூடப்பட்டன. வழக்கு விசாரணை காணொலி மூலமாக நடந்தது. தொற்று குறைந்த 29 மாவட்டங்களில் கீழமை நீதிமன்றங்களை திறந்து நேரடி விசாரணையை மேற்கொள்ள ஏற்கெனவே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் அந்த வளாகத்தில் உள்ள கீழமை நீதிமன்றங்களை சோதனை ரீதியாக செப்டம்பர் 7 முதல் திறக்க தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி தலைமையிலான மூத்த நீதிபதிகள் அடங்கிய நிர்வாகக் குழு உத்தரவிட்டது. அதன்படி, சென்னை உயர் நீதிமன்றத்தில் 2 நீதிபதிகள் அடங்கிய 6 அமர்வுகளில் நேற்று நேரடி விசாரணை நடத்தப்பட்டது. முற்பகலில் நேரடி விசாரணை மேற்கொண்ட நீதிபதிகள், பிற்பகலில் காணொலி மூலம் வழக்குகளை விசாரித்தனர்.
உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள அமர்வு நீதிமன்றங்களிலும் நேரடி விசாரணை முறை அமலுக்கு வந்தது. ஆனால், சம்பந்தப்பட்ட வழக்கறிஞர்கள் மட்டுமே நீதிமன்றத்துக்குள் அனுமதிக்கப்பட்டனர். கரோனா தடுப்பு நடவடிக்கையாக அவர்கள் கருப்பு அங்கி, கோட் அணிய தடை விதிக்கப்பட்டது. இதனால், வழக்கமான வழக்கறிஞர் சீருடையில் கருப்பு நிற பட்டை மட்டும் அணிந்து வாதிட்டனர்.
பிற வழக்கறிஞர்கள் தங்களது அறைகளுக்கு செல்லக்கூட அனுமதிக்கப்படவில்லை. வழக்கு தொடர்ந்த மனுதாரர்களும் அனுமதிக்கப்படவில்லை.
அமர்வு நீதிமன்றங்களில் ஆஜராக வேண்டிய வழக்கறிஞர்கள், சாட்சிகளையும் போலீஸார்தடுத்ததால், வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டு அனுமதிக்கப்பட்டனர். சோதனை ரீதியிலான இந்த நடைமுறையை தொடர்வது குறித்து நிர்வாகக் குழு வரும் 22-ம் தேதி ஆலோசித்து முடிவு எடுக்கும் என்று கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT