Published : 08 Sep 2020 08:02 AM
Last Updated : 08 Sep 2020 08:02 AM
ரவுடி சங்கரை என்கவுன்ட்டரில் சுட்டுக் கொன்ற வழக்கு தொடர்பாக காவல் உதவிஆணையர், ஆய்வாளர் உட்பட 7 பேரிடம் சிபிசிஐடி அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
சென்னை அயனாவரத்தை சேர்ந்த ரவுடி சங்கர் மீது கொலை, கொலை முயற்சிஉட்பட 50-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. கடந்த ஆகஸ்ட் மாதம் 21-ம்தேதி தனிப்படை போலீஸாருடன் ஏற்பட்டமோதலில் சங்கர் சுட்டுக் கொல்லப்பட்டார்.
இந்த வழக்கை அயனாவரம் காவல் நிலைய போலீஸாரே வழக்காக பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்நிலையில், ரவுடி சங்கர் என்கவுன்ட்டர் செய்யப்பட்ட வழக்கை அயனாவரம் காவல் நிலையத்திலிருந்து சிபிசிஐடி அல்லது சிபிஐ விசாரணைக்கு மாற்றக்கோரி அவரது தாயார் கோவிந்தம்மாள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதைத்தொடர்ந்து ரவுடி சங்கர் என்கவுன்ட்டர் செய்யப்பட்ட வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி டிஜிபி ஜே.கே.திரிபாதி உத்தரவிட்டார். அதைத் தொடர்ந்து சங்கர் என்கவுன்ட்டர் செய்யப்பட்ட வழக்கில் சிபிசிஐடி அதிகாரிகள் விசாரணையை தொடங்கியுள்ளனர்.
விசாரணைக்காக நேரில் ஆஜராகும்படி அயனாவரம் காவல் உதவி ஆணையர் ராஜா, ஆய்வாளர் நடராஜ், உதவி ஆய்வாளர் யுவராஜ், காவலர்கள் ராஜ், வடிவேல், ஜெயப்பிரகாஷ், முருகன் ஆகியோருக்கு கடந்த 3-ம் தேதி சிபிசிஐடி சம்மன் அனுப்பியது. அதன்படி, உதவி ஆணையர் ராஜா உட்பட 7 பேரும் எழும்பூர் சிபிசிஐடி அலுவலகத்தில் நேற்று ஆஜரானார்கள். 7 பேரிடமும் தனித்தனியே விசாரணை நடத்தப்பட்டது. அது வீடியோ காட்சியாகவும் பதிவு செய்யப்பட்டது. மேலும், 25 கேள்விகள் கொண்ட படிவம் 7 பேருக்கும் வழங்கப்பட்டு, அதற்கான பதிலை அவர்கள் கைப்பட எழுதிக் கொடுத்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT