

தமிழ்நாடு, புதுச்சேரி பார் கவுன்சிலில் பெண் வழக்கறிஞர்களுக்கு இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என பார் கவுன்சில் இணைத் தலைவர் பா.அசோக் பேசினார்.
தமிழ்நாடு வழக்கறிஞர்கள் தோழமை அமைப்பு சார்பில், கரோனா ஊரடங்கில் வழக்கறிஞர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் மற்றும் அதற்கான தீர்வுகள் பற்றிய இணைய வழி கருத்தரங்கு நடைபெற்றது.
இதில் பல்வேறு மாவட்டங்களிலிருந்து மூத்த, இளம் வழக்கறிஞர்கள் என 80-க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றனர். தமிழ்நாடு வழக்கறிஞர்கள் தோழமை அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் சந்தானம் தலைமை வகித்தார்.
இதில், தமிழ்நாடு புதுச்சேரி பார் கவுன்சில் இணைத் தலைவர் பா.அசோக், பார் கவுன்சில் உறுப்பினர் வழக்கறிஞர் சிவசுப்ரமணியன் ஆகியோர் பேசினர்.
அசோக் பேசுகையில், தமிழ்நாடு, புதுச்சேரி பார் கவுன்சிலில் பெண் வழக்கறிஞர்களின் பங்கேற்புக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் மற்ற துறைகளில் இருப்பது போல் பார் கவுன்சிலில் பெண் வழக்கறிஞர்களுக்கான இடஒதுக்கீடு முறையை கொண்டுவர வேண்டும் என்றார்.
கருத்தரங்கில் பேசியவர்களில் பெரும்பாலானோர், கரோனா ஊரடங்கால் வழக்கறிஞர்கள் மத்தியில் நிலவும் அச்ச உணர்வை போக்கி வழக்கறிஞர்களின் பாதுகாப்பு அரணாக பார் கவுன்சில் இருக்க வேண்டும், ஊரடங்கால் கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இளம் வழக்கறிஞர்களுக்கு வழங்கும் நிதி உதவியை ரூ.3 ஆயிரத்தில் இருந்து ரூ.5 ஆயிரமாக உயர்த்த வேண்டும், இந்த நிதியுதவியை 5 ஆண்டுகளுக்கு நீட்டிக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.