Published : 07 Sep 2020 03:11 PM
Last Updated : 07 Sep 2020 03:11 PM

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி, வெப்பச்சலனம்; 7 மாவட்டங்களில் கனமழை: வானிலை ஆய்வு மையம் தகவல்

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்தில் 7 மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் செய்திக்குறிப்பு:

தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, ஈரோடு, திண்டுக்கல், தேனி, மதுரை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், விருதுநகர், கன்னியாகுமரி மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் லேசான மழையும் பெய்யக்கூடும்.

கன மழை எச்சரிக்கை:

அடுத்த 24 மணி நேரத்தில் கோயம்புத்தூர், நீலகிரி, தர்மபுரி, சேலம், கடலூர், பெரம்பலூர், திருச்சி ஆகிய 7 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கன மழை பெய்யும்.

அடுத்த 48 (08.09.2020) மணி நேரத்தில் கோயம்புத்தூர், நீலகிரி, தர்மபுரி, ஈரோடு, சேலம், நாமக்கல், திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கன மழையும் பெய்யக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் இடியுடன் கூடிய லேசான மழை பெய்யும்.

அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியசையும், குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியசையும் ஒட்டி பதிவாகக்கூடும்.

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்ச மழைபெய்த விவரம்:

தேவலா (நீலகிரி) 18 செ.மீ, ஆலங்குடி (புதுக்கோட்டை) 12 செ.மீ, பேச்சிப்பாறை (கன்னியாகுமரி) 9 செ.மீ, குழித்துறை (கன்னியாகுமரி), சிவலோகம் (கன்னியாகுமரி), கிருஷ்ணராயபுரம் (கரூர்) தலா 8 செ.மீ, கரூர், காங்கேயம் (திருப்பூர்), சோலையார் (கோவை), புத்தன் அணை (கன்னியாகுமரி), சித்தார் (கன்னியாகுமரி), பெருஞ்சாணி (கன்னியாகுமரி) தலா 7 செ.மீ, வால்பாறை (கோவை ), சூரலாக்கோடு (கன்னியாகுமரி ) தலா 6 செ.மீ .

மீனவர்களுக்கான எச்சரிக்கை :

செப்டம்பர் 07, 08 ஆகிய தேதிகளில் கேரள, கர்நாடக கடலோரப் பகுதிகள் மற்றும் லட்சத்தீவு பகுதிகளில் பலத்த காற்று 50 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

செப்டம்பர் 09, 10 ஆகிய தேதிகளில் தென்கிழக்கு அரபிக் கடல் , கேரள, கர்நாடக கடலோரப் பகுதிகள் மற்றும் லட்சத்தீவு பகுதிகளில் பலத்த காற்று 45 முதல் 55 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

செப்டம்பர் 09 முதல் செப்டம்பர் 11 வரை குமரிக்கடல், மன்னார் வளைகுடா பகுதிகளில் பலத்த காற்று 45 முதல் 55 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

செப்டம்பர் 07 முதல் செப்டம்பர் 11 வரை தென்மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று 45 முதல் 55 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

மீனவர்கள் மேற்கண்ட பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென அறிவுறுத்தப்படுகிறார்கள்.

கடல் உயர்அலை முன்னறிவிப்பு:

தென் தமிழக கடலோர பகுதிகளில் குளச்சல் முதல் தனுஷ்கோடி செப்.07 இரவு 11.30 மணி வரை கடல் உயர் 3.5 முதல் 4.8 மீட்டர் வரை எழும்பக்கூடும்”.

இவ்வாறு வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x