கோவையில் வீட்டுக் கட்டிடம் இடிந்து விழுந்து விபத்து: உயிரிழந்த இருவரின் குடும்பங்களுக்கு தலா ஒரு லட்ச ரூபாய் நிதியுதவி; முதல்வர் பழனிசாமி உத்தரவு

முதல்வர் பழனிசாமி: கோப்புப்படம்
முதல்வர் பழனிசாமி: கோப்புப்படம்
Updated on
1 min read

கோவையில் வீட்டுக் கட்டிடம் இடிந்து விழுந்து ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்த இருவரின் குடும்பங்களுக்கு தலா ஒரு லட்ச ரூபாய் நிதியுதவி வழங்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

இதுதொடர்பாக, முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று (செப். 7) வெளியிட்ட அறிக்கை:

"கோயம்புத்தூர் மாவட்டம், பேரூர் வட்டம், கொமாராபாளையம் கிராமத்தைச் சேர்ந்த தனியாருக்கு சொந்தமான பழைய இரண்டு அடுக்கு மாடி வீடு நேற்று (செப். 6) எதிர்பாராத விதமாக இடிந்து விழுந்ததுடன், அருகாமையிலுள்ளள ஓட்டு வீடும் முழுமையாக இடிந்து விட்டது. இந்த விபத்தில் கான்கிரீட் கட்டிடத்திலிருந்த கண்ணன் என்பவரின் மனைவி ஸ்வேதா என்கிற ஷாலினி மற்றும் ஓட்டு வீட்டிலிருந்த கருப்பண்ண ஆசாரி என்பவர் மகன் கோபால் சாமி ஆகிய இருவரும் உயிரிழந்தனர் என்ற செய்தியை அறிந்து நான் மிகுந்த வேதனை அடைந்தேன்.

இந்த துயரச் சம்பவத்தில் உயிரிழந்த இரண்டு நபர்களின் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த விபத்தில் ஆறு நபர்கள் காயமடைந்துள்ளனர் என்ற செய்தியை அறிந்து நான் மிகுந்த வேதனை அடைந்தேன். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் இவர்கள் அனைவரும் விரைவில் பூரண குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என்ற எனது விருப்பத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த செய்தி குறித்து அறிந்தவுடன், உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்பு நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ளவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கவும், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறவும் கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியருக்கு நான் உத்தரவிட்டுள்ளேன்.

இந்த துயரச் சம்பவத்தில் உயிரிழந்த இரண்டு நபர்களின் குடும்பத்திற்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா ஒரு லட்சம் ரூபாய் வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன்"

இவ்வாறு முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in