Published : 07 Sep 2020 10:36 AM
Last Updated : 07 Sep 2020 10:36 AM

ஞாயிறு முழு ஊரடங்கு தளர்வால் தாமிரபரணி கரைகளில் மக்கள் கூட்டம்

முக்கூடல் தாமிரபரணி ஆற்றங்கரையில் குளித்து மகிழ்ந்த மக்கள்.

திருநெல்வேலி/ தென்காசி

திருநெல்வேலி மாவட்டத்தில் கரோனா ஊரடங்கு தளர்வால் விடுமுறை நாளான நேற்று தாமிரபரணி ஆற்றங்கரைகளில் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் ஞாயிற்றுக் கிழமைகளில் தாமிரபரணி ஆற்றங்கரைகளில் மக்கள் குளிக்க திரள்வது வழக்கமானது. கரோனா ஊரடங்கு கடந்த மார்ச் மாதத்தில் அமலுக்கு வந்தபோது, தாமிரபரணி ஆற்றங்கரைகளில் மக்கள் கூடவும், படித்துறைகளில் குளிக்கவும் போலீஸார் தடைவிதித்திருந்தனர். தொடர்ந்து ஊரடங்கு கடுமையாக்கப்பட்டதை அடுத்து ஆற்றங்கரைகளுக்கு மக்கள் வருவதும் வெகுவாக குறைந்திருந்தது. படிப்படியாக ஊரடங்கு தளர்வு அமலுக்கு வந்தபின்னரும் ஆற்றங்கரை களில் வழக்கமான கூட்டம் இருக்கவில்லை. கடந்த 2 மாதங்களில் ஞாயிற்றுக்கிழமை களில் முழு ஊரடங்கு அமலில் இருந்ததால் மக்கள் பெரும்பாலும் வெளியே வரவில்லை.

இந்நிலையில் ஊரடங்கு தளர்வுகள் அமலுக்கு வந்துள்ள நிலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாளில் முக்கூடல், திருநெல்வேலி, சீவலப்பேரி, முறப்பநாடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தாமிரபரணி ஆற்றங்கரைகளில் அதிகளவில் மக்கள் வந்து கரோனா அச்சமின்றி சகஜமாக குளித்தனர்.

திருநெல்வேலி மாநகரிலும், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் நேற்று மக்கள் சகஜமாக நடமாடினர். வாகனப் போக்குவரத்தும் வழக்கம்போல் இருந்தது. கடைகள் திறக்கப்பட்டிருந்தன. சந்தை களிலும், கடைவீதிகளிலும் மக்கள் அதிகளவில் காணப்பட்டனர்.

இயல்பு நிலை

தென்காசி மாவட்டத்தில் நேற்று அனைத்து கடைகளும் வழக்கம்போல் திறக்கப்பட்டன. சாலைகளிலும் வாகன போக்குவரத்து வழக்கம் போல் இருந்தது. கடைகள் அனைத்தும் திறக்கப்பட்ட நிலையிலும், வாடிக்கையாளர் கூட்டம் குறைவாகவே இருந்தது. வழக்கமாக ஞாயிற்றுக் கிழமை களில் இறைச்சிக் கடைகளில் கூட்டம் அதிகமாக இருக்கும். ஆனால் நேற்று கூட்டம் குறைவாகவே இருந்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x