Published : 07 Sep 2020 10:23 AM
Last Updated : 07 Sep 2020 10:23 AM

தஞ்சாவூரில் கரோனா தடுப்புப் பணி ஆய்வின்போது முகக்கவசமின்றி வந்தவருக்கு அபராதம் விதித்த ஆட்சியர்

தஞ்சாவூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் நேற்று நடைபெற்ற கரோனா மற்றும் டெங்கு நோய் தடுப்புப் பணி ஆய்வின்போது, முகக்கவசமின்றி வந்த இளைஞருக்கு ஆட்சியர் ம.கோவிந்தராவ் அபராதம் விதித்து உத்தரவிட்டார்.

தஞ்சாவூர் மாநகராட்சிக்குட் பட்ட அருளானந்தம்மாள் நகர், அருளானந்த நகர், வெட்டுக்காரர் தெரு, மனோன்மணி நகர் மகர்நோன்புச்சாவடி ஆகிய இடங்களில் நடைபெற்று வரும் கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கை பணிகளை தஞ்சை ஆட்சியர் ம.கோவிந்தராவ் நேற்று ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது, அருளானந்த நகர் சாலையில் முகக் கவசம் அணியாமல் இருசக்கர வாகனத்தில் வந்த ராஜரத்தினம் என்ற இளைஞரை தடுத்து நிறுத்தி, அவரை எச்சரித்து அறிவுரை கூறிய ஆட்சியர், பின்னர், அந்த இளைஞரிடம் முகக் கவசம் அணியாமல் வந்ததற்காக மாநகராட்சி ஊழியர்களிடம் உட னடியாக அபராதத் தொகையை செலுத்துமாறு உத்தரவிட்டு, அவருக்கு முகக் கவசத்தை வழங்கினார்.

பின்னர், ஆட்சியர் செய்தியாளர் களிடம் கூறியதாவது:

தஞ்சாவூர் மாநகராட்சியில் இதுவரை 947 மருத்துவ முகாம்கள் நடைபெற்றுள்ளன. இதில், 35,756 பேர் பரிசோதிக்கப்பட்டுள்ளனர்.

தஞ்சாவூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கரோனா மற்றும் டெங்கு கட்டுப்பாட்டு பணிக்காக 210 களப்பணியாளர்கள் மற்றும் 24 தூய்மை பாரத இயக்க பணியாளர்கள் வீடு வீடாகச் சென்று நோய்த் தொற்று அறிகுறிகளான காய்ச்சல், சளி, இருமல், தொண்டை வலி, மூச்சு விடுவதில் சிரமம், சுவையற்ற, மணமற்ற தன்மை ஆகிய அறி குறிகள் உள்ளனவா என ஆய்வு செய்து கணக்கெடுக்கும் பணியை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும், தெர்மல் ஸ்கேனர் கருவி மூலம் உடல் வெப்பநிலை பரிசோதனை, ஆக்சிமீட்டர் கருவி மூலம் ரத்தத்தில் ஆக்சிஜன் அளவை கண்டறியும் பரிசோதனை மற்றும் நாடித்துடிப்பு பரிசோதனை ஆகிய பரிசோதனைகளையும் வீடுவீடாகச் சென்று செய்து வருகின்றனர்.

இந்த ஆய்வுக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு அளித்து கரோனாவில் இருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்றார்.

தஞ்சாவூர் மாநகராட்சி ஆணையர் ஜானகி ரவீந்திரன், மாநகர நலஅலுவலர் நமச்சிவாயம் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x