Published : 07 Sep 2020 08:44 AM
Last Updated : 07 Sep 2020 08:44 AM

முகக் கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதிப்பது தண்டிக்க அல்ல: அமைச்சர் சி.விஜயபாஸ்கர் விளக்கம்

முகக் கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என அறிவித்திருப்பது விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்குத் தானே தவிர, பொதுமக்களை தண்டிக்க அல்ல என அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

புதுக்கோட்டை நகராட்சி அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற கரோனா தடுப்பு பணி குறித்த ஆய்வுக் கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களிடம் அவர் கூறியது:

தமிழகத்தில் 1,005 ஆம்புலன்ஸ்கள் பயன்பாட்டில் உள்ளன. புதிதாக 500 ஆம்புலன்ஸ்களை வாங்குவதற்கு அரசு ஆணையிட்டுள்ள நிலையில், முதல்கட்டமாக 108 ஆம்புலன்ஸ்களின் சேவை தொடங்கப்பட்டுள்ளது. செங்கல்பட்டு அரசு மருத்துவமனை வளாகத்தில் இன்று (நேற்று) ஒரு ஆம்புலன்ஸில் எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட தீ விபத்து சம்பவம் குறித்து விசாரணை நடத்த 108 ஆம்புலன்ஸ் நிர்வாகத்துக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

வெளிநாட்டில் இருந்து வரும் பயணிகள் தனிமைப்படுத்தப்படும்போது அவர்கள் விருப்பத்துக்கு ஏற்ப தனியார் விடுதிகளில் தங்கிக் கொள்ளவும் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. அதில், கட்டணச் சலுகையும் வழங்கப்பட்டுள்ளது.

முகக் கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என அறிவித்திருப்பது கரோனா குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக தானே தவிர, பொதுமக்களை தண்டிக்க அல்ல.

கரோனா தடுப்பூசி முதல்கட்ட மருந்து வந்துவிட்டது. இன்னும் ஒரு சில நாட்களில் பரிசோதனை செய்யும் பணி தொடங்கும் என்றார்.

அப்போது, ஆட்சியர் பி.உமா மகேஸ்வரி, மாநில பொதுசுகாதாரத் துறை இயக்குநர் செல்வவிநாயகம் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x