Published : 07 Sep 2020 07:40 AM
Last Updated : 07 Sep 2020 07:40 AM

தூய்மை நகரங்கள் பட்டியலில் பின்தங்கியும் மாநகர தூய்மையில் மெத்தனம் காட்டும் சென்னை மாநகராட்சி; குப்பையை முறையாக அகற்றுவதில்லை என பொதுமக்கள் புகார்

தேசிய அளவில் தூய்மை நகரங்கள் பட்டியலில் சென்னை மாநகராட்சி பின்தங்கியுள்ள நிலையில், மாநகர தூய்மையில் மாநகராட்சி நிர்வாகம் தொடர்ந்து மெத்தனமாக இருப்பதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

தேசிய அளவிலான தூய்மை நகரங்கள் பட்டியலை மத்திய அரசு கடந்த மாதம் வெளியிட்டது. அதில் 10 லட்சம் மக்கள்தொகைக்கு மேல் உள்ள மாநகரங்கள் பட்டியலில் மொத்தமுள்ள 47 நகரங்களில், சென்னை 45-வது இடத்தை பிடித்தது.

தூய்மை நகரங்கள் மதிப்பீட்டில் மத்திய அரசு வழங்கும் 6 ஆயிரம் மதிப்பெண்களில், சென்னைக்கு2,010 மதிப்பெண்கள் மட்டுமேகிடைத்துள்ளன. தூய்மை இந்தியா இயக்கம் மற்றும் தூய்மைநகரங்கள் குறித்த கணக்கெடுப்பு தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்துதல் பிரிவில் 160-க்கு 23 மதிப்பெண்கள் மட்டுமே கிடைத்துள்ளன.

பூஜ்ஜியம் மதிப்பெண்

நேரடி ஆய்வில் 1500-க்கு 565 மதிப்பெண்கள் மட்டுமே கிடைத்துள்ளன. இதில் பொது கழிப்பறை மற்றும் சமுதாய கழிப்பறைகளில் தூய்மை இந்தியா இயக்கம் தொடர்பாக தகவல்களை பொதுமக்கள் கண்ணில் படும்படிவைத்தல், தூய்மை நகரங்கள் கணக்கெடுப்பு தொடர்பாக மாநகரங்களின் பல்வேறு பகுதிகளில் ஓவியம் வரைதல் ஆகிய பிரிவுகளில் மாநகராட்சிக்கு பூஜ்ஜியம் மதிப்பெண் வழங்கப்பட்டுள்ளது. மேலும் காய்கறி, இறைச்சி சந்தைகளின் தூய்மையில் 150-க்கு 56, குடிசைப் பகுதிகளை அழகுபடுத்துதல் பிரிவில் 200-க்கு 54 மதிப்பெண்கள் மட்டுமே கிடைத்துள்ளன.

இவ்வாறு மாநகர தூய்மையில் சென்னை பின்தங்கியுள்ள நிலையில் மாநகர தூய்மையில் மாநகராட்சி இப்போதும் மெத்தனமாக இருப்பதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக பொதுமக்கள் கூறியதாவது: சென்னையில் பல இடங்களில் குப்பையை தினமும்அகற்றுவதில்லை. குறிப்பிட்ட இடத்தில் குப்பை அகற்றவில்லை என பல முறை புகார் வரும் நிலையில், குப்பையை அகற்றிவிட்டு நடவடிக்கையை மாநகராட்சி முடித்துக்கொள்கிறது. இது தொடர்பான பல வழக்குகள் பசுமை தீர்ப்பாயத்தில் விசாரிக்கப்பட்டு வருகின்றன. மாதவரம் அஞ்சலகம்முன்பு சாலையில் பொதுமக்கள் தொடர்ந்து குப்பை கொட்டுகின்றனர். அதை மாநகராட்சி தடுக்கவே இல்லை. பல்வேறு மீன்சந்தைகளில் உருவாகும் கழிவுகளை அகற்றவும் மாநகராட்சி நடவடிக்கை எடுக்கவில்லை. இவ்வாறு பொதுமக்கள் கூறினர்.

இது தொடர்பாக சென்னை மாநகராட்சி அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘குப்பையை வகை பிரித்துபெறுவது 49 சதவீதமாக உயர்ந்துள்ளது. உரம், எரிவாயு, மின்சாரம் தயாரிப்பு மூலம் தினமும் 1,120 டன்குப்பையை அழிக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இதில் தற்போது548 டன் குப்பையை தினமும் அழிக்கும் பணி நடைபெற்று வருகிறது.வீடு வீடாக குப்பை சேகரிக்கும்முறை 94 சதவீதமாக உள்ளது.விரைவில் 100 சதவீதம் எட்டப்படும்.அனைத்து பகுதிகளிலும் தினமும் குப்பைகளை அகற்றுவது உறுதி செய்யப்படும்" என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x