Last Updated : 06 Sep, 2020 05:18 PM

 

Published : 06 Sep 2020 05:18 PM
Last Updated : 06 Sep 2020 05:18 PM

புதுச்சேரியில் இன்னும் திறக்கப்படாத நூலகங்களால் தவிக்கும் வாசகர்கள்: தமிழகத்தைப் போல் திறக்கக் கோரி முதல்வரிடமும் வலியுறுத்தி மனு

கரோனாவால் மூடப்பட்டுள்ள பழமையான ரோமன் ரோலண்ட் நூலகம்.

புதுச்சேரி

புதுச்சேரியில் இன்னும் திறக்கப்படாத நூலகங்களால் வாசகர்கள் தவிக்கின்றனர். தமிழகத்தைப் போல் திறக்கக் கோரி முதல்வரிடம் வலியுறுத்தி மனுவும் தரப்பட்டுள்ளது. அரசு உத்தரவுக்காக கலைப் பண்பாட்டுத் துறையினரும் காத்துள்ளனர். கரோனா தொற்றால் கடந்த மார்ச் மாத மூன்றாவது வாரத்தில் புதுச்சேரியில் அரசு நூலகங்கள் மூடப்பட்டன. அதைத் தொடர்ந்து ஊரடங்கு தளர்வின்போது கோயில்கள், ஹோட்டல்கள் தொடங்கி மதுபானக் கடைகள் வரை திறக்கப்பட்டன. கடைகள் இயங்கும் நேரமும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கடந்த 1-ம் தேதியன்று நூலகங்கள் திறக்கப்பட்டுள்ளன. கல்வி தொடங்கி பல விஷயங்களில் தமிழகத்தைப் பின்பற்றும் புதுச்சேரியில் இன்னும் நூலகம் மட்டும் திறக்கப்படவில்லை. ஐந்து மாதங்களாக நூலகம் திறக்கப்படாததால் தினசரி நாளிதழ்கள், வார இதழ்கள் படிக்க முடியாமல் பல வாசகர்களும் தவிக்கின்றனர். நூல்களை எடுத்துச் சென்றுவிட்டு திருப்பித் தர முடியாமல் பலரும் காத்துள்ளனர். ஏராளமான மாணவ, மாணவிகள் சொந்த நூல்களை எடுத்துவந்து படிப்பதுடன், போட்டித் தேர்வுக்குத் தயாராகும் நூல்களை வாசிக்க முடியாமல் உள்ளனர்.

தமிழகத்தைப் போல் புதுவையிலும் நூலகங்களைத் திறக்கக் கோரி முதல்வருக்கு மனு

இந்நிலையில் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமிக்கு ராஜீவ்காந்தி மனித உரிமைகள் விழிப்புணர்வு அமைப்புத் தலைவர் ரகுபதி இன்று அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:

புதுச்சேரியில் கலை பண்பாட்டுத் துறையின் கீழ் பழமை வாய்ந்த ரோமன் ரோலண்ட் நூலகம் மற்றும் நகரம் - கிராமப் பகுதிகளில் 40க்கும் மேற்பட்ட கிளை நூலகங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில் கரோனா தொற்றுப் பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் பொது ஊரடங்கு அறிவிக்கப்பட்டது முதல் அனைத்து நூலகங்களும் முற்றிலும் மூடப்பட்டன.

இதனால் கடந்த 5 மாதங்களுக்கு மேலாக நூலகங்கள் திறக்கப்படாததால் கிராமப் பகுதியில் தினமும் நூலகத்திற்கு வருகை தரும் வாசகர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர். தற்போது புதுச்சேரி அரசு ஊரடங்கில் பல்வேறு தளர்வுகளை அறிவித்ததோடு மட்டுமல்லாது, அனைத்து அரசு அலுவலகங்களும் முழுமையாகச் செயல்படவும் அரசு ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் முழு எண்ணிக்கையில் பணிக்கு வர வேண்டும் என அறிவித்துள்ள நிலையிலும், நூலகங்களைத் திறக்க அனுமதி அளிக்கவில்லை.

மேலும், தமிழகத்தில் கடந்த 1-ம் தேதி முதல் நூலகங்களைத் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதுபோல் புதுச்சேரியிலும் நிபந்தனைகளுடன் கூடிய வகையில் நூலகங்களைத் திறக்க அனுமதி அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

நூலக வட்டாரங்களில் விசாரித்தபோது, "அரசு அனுமதி வரவில்லை. காத்துள்ளோம். பாதுகாப்புடன் வாசகர்களை வரவேற்கத் தயாராக இருக்கிறோம்" என்று குறிப்பிட்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x