Published : 06 Sep 2020 05:26 PM
Last Updated : 06 Sep 2020 05:26 PM

வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி, வெப்பச் சலனம்: 5 மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி மற்றும் வெப்பச் சலனம் காரணமாக தமிழகத்தின் 5 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:

“தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி மற்றும் வெப்பச் சலனம் காரணமாக கடலூர், விழுப்புரம், சேலம், கள்ளக்குறிச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, சிவகங்கை, விருதுநகர், ராமநாதபுரம், திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும்.

கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல், நீலகிரி, மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் இடியுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸையும், குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸையும் ஒட்டி பதிவாகக்கூடும்.

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்ச மழை பெய்த விவரம்:

பரமக்குடி (ராமநாதபுரம்) 11 செ.மீ., கீழ் கோதையாறு (கன்னியாகுமரி) 9 செ.மீ., கடம்பூர் (தூத்துக்குடி), கயத்தாறு (தூத்துக்குடி) தலா 6 செ.மீ., தேவலா (நீலகிரி), சத்தியமங்கலம் (ஈரோடு) தலா 5 செ.மீ., மதுக்கூர் (தஞ்சாவூர்), கமுதி (ராமநாதபுரம்), வால்பாறை (கோவை), திருவாரூர் (திருவாரூர்), கழுகுமலை (தூத்துக்குடி), ஆழியாறு (கோவை) தலா 4 செ.மீ.

மீனவர்களுக்கான எச்சரிக்கை:

செப்டம்பர் 6 ஆம் தேதியில், தென் கிழக்கு அரபிக் கடல், மத்தியக் கிழக்கு, லட்சத்தீவு பகுதிகளில் சூறாவளிக் காற்று 50 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

செப்டம்பர் 6- 7 ஆம் தேதிகளில் குமரிக் கடல், மன்னார் வளைகுடா பகுதிகளில் சூறாவளிக் காற்று 40-50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

செப்டம்பர் 6-ம் தேதி முதல் செப்டம்பர் 8-ம் தேதி வரை கேரளா மற்றும் கர்நாடக கடலோரப் பகுதிகளில் சூறாவளிக் காற்று 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

செப்டம்பர் 7, 8 ஆகிய தேதிகளில் தென்கிழக்கு அரபிக் கடல், மத்தியக் கிழக்கு, லட்சத்தீவு பகுதிகளில் சூறாவளிக் காற்று 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

செப்டம்பர் 6-ம் தேதி முதல் செப்டம்பர் 10 வரை தென்மேற்கு அரபிக் கடல் பகுதிகளில் பலத்த காற்று 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

செப்டம்பர் 10-ம் தேதி மன்னார் வளைகுடா பகுதிகளில் சூறாவளிக் காற்று 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

மீனவர்கள் மேற்கண்ட பகுதிகளுக்குச் செல்ல வேண்டாமென அறிவுறுத்தப்படுகிறார்கள்.

கடல் உயர் அலை முன்னறிவிப்பு:

தென் தமிழக கடலோரப் பகுதிகளில் குளச்சல் முதல் தனுஷ்கோடி வரை செப். 7-ம் தேதி இரவு 11.30 மணி வரை கடல் உயர் அலை 3.5 முதல் 4.8 மீட்டர் வரை எழும்பக்கூடும்”.

இவ்வாறு வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x