Last Updated : 06 Sep, 2020 12:56 PM

 

Published : 06 Sep 2020 12:56 PM
Last Updated : 06 Sep 2020 12:56 PM

புதுச்சேரியில் புதிதாக 478 பேருக்கு கரோனா தொற்று; மேலும் 16 பேர் உயிரிழப்பு; உயிரிழந்தோர் எண்ணிக்கை 300-ஐக் கடந்தது

புதுச்சேரியில் இன்று புதிதாக 478 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில், மேலும் 16 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 300-ஐக் கடந்துள்ளது. 3 நாளில் 54 பேர் இறந்துள்ளனர்.

இதுகுறித்து புதுச்சேரி சுகாதாரத்துறை இயக்குநர் டாக்டர் மோகன்குமார் இன்று (செப் 6) கூறியதாவது:

‘‘புதுச்சேரியில் 1,701 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் புதுச்சேரியில் 409, காரைக்காலில் 40, ஏனாமில் 29 என மொத்தம் 478 பேருக்கு தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும், புதுச்சேரியில் 13 பேர், காரைக்காலில் 2 பேர், ஏனாமில் ஒருவர் என 16 பேர் உயிரிழந்துள்ளனர்.

சாரம் அன்னை தெரசா நகர் ரோஜா வீதியைச் சேர்ந்த 60 வயது முதியவர், உருளையன்பேட்டை சுப்பையா நகரைச் சேர்ந்த 64 வயது மூதாட்டி ஆகிய இருவரும் புதுச்சேரி அரசு பொது மருத்துவமனையிலும், புதுசாரம் அன்னை தெரசா நகர் மல்லிகை வீதியைச் சேர்ந்த 74 வயது முதியவர், குருமாம்பேட் எல்ஐசி ஹவுங் போர்டைச் சேர்ந்த 80 வயது முதியவர் ஆகிய இருவரும் ஜிப்மரிலும் உயிரிழந்துள்ளனர்.

வீராம்பட்டினம் அறிஞர் அண்ணா நகரைச் சேர்ந்த 55 வயது ஆண், முத்தியால்பேட்டை காட்டாமணிக்குப்பம் வீதியைச் சேர்ந்த 74 வயது முதியவர், மடுகரை இந்திரா நகரைச் சேர்ந்த 56 வயது பெண், லாஸ்பேட்டை தாகூர் நகரைச் சேர்ந்த 85 வயது முதியவர், அரியூர் விநாயகர் கோயில் தெருவைச் சேர்ந்த 68 வயது முதியவர், லாஸ்பேட்டை சாந்தி நகரைச் சேர்ந்த 62 வயது முதியவர், கிருமாம்பாக்கம் மந்தவெளி வீதியைச் சேர்ந்த 65 வயது முதியவர், முத்தியால்பேட்டை சோலை நகர் மந்தவெளி மாரியம்மன் கோயில் வீதியைச் சேர்ந்த 54 வயது ஆண் நபர், ஜி.என்.பாளையம் எழில் நகரைச் சேர்ந்த 65 வயது மூதாட்டி ஆகியோர் இந்திரா காந்தி அரசு மருத்துவக் கல்லூரியில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

மோகன்குமார்

மேலும், காரைக்கால் நிரவி பழைய பஜார் வீதியைச் சேர்ந்த 60 வயது முதியவர், காரைக்கால் நல்லம்பாள் பகுதியைச் சேர்ந்த 60 வயது மூதாட்டி ஆகிய இருவரும் காரைக்காலிலும், ஏனாம் காந்தி நகரைச் சேர்ந்த 66 வயது மூதாட்டி ஏனாம் அரசு பொது மருத்துவமனையிலும் உயிரிழந்துள்ளனர். இதனால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 314 ஆக உயர்ந்துள்ளது. இறப்பு விகிதம் 1.84 சதவீதமாக உள்ளது.

புதுச்சேரி மாநிலத்தில் இதுவரை 17 ஆயிரத்து 032 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவற்றில் புதுச்சேரியில் 2,991 பேர், காரைக்காலில் 157 பேர், ஏனாமில் 125 பேர் என 3,273 பேர் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அதேபோல், புதுச்சேரியில் 1,527 பேர், காரைக்காலில் 82 பேர், ஏனாமில் 171 பேர், மாஹேவில் 33 பேர் என மொத்தம் 1,813 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதன் மூலம் புதுச்சேரி மாநிலத்தில் தற்போது வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் உட்பட மொத்தமாக 5,086 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

இன்று அதிகபட்சமாக புதுச்சேரியில் 493 பேர், காரைக்காலில் 4 பேர், ஏனாமில் 28 பேர் என மொத்தம் 525 பேர் ‘டிஸ்சார்ஜ்’ செய்யப்பட்டுள்ளனர். இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 11 ஆயிரத்து 632 (68.29 சதவீதம்) ஆக அதிகரித்துள்ளது. குறிப்பாக, இதுவரை 83 ஆயிரத்து 142 பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. இதில் 64 ஆயிரத்து 655 பரிசோதனைகள் ‘நெகடிவ்’ என்று முடிவு வந்துள்ளது’’.

இவ்வாறு மோகன்குமார் தெரிவித்தார்.

புதுச்சேரியில் கரோனா தொற்றின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதற்கேற்ப உயிரிழப்போர் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. இந்நிலையில் கடந்த 4 ஆம் தேதி 20 பேர், நேற்று 18 பேர், இன்று 16 பேர் என கடந்த 3 நாட்களில் மட்டும் 54 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் காரணமாக இறப்பு விகிதம் 1.84 சதவீதமாக உயர்ந்துள்ளது. இது தேசிய சராசரியை (1.73 சதவீதம்) விட அதிகமாகும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x