Published : 06 Sep 2020 10:45 AM
Last Updated : 06 Sep 2020 10:45 AM

காற்றில் பறக்கும் போக்குவரத்து விதிமுறைகள்: மக்களும் ஒத்துழைத்தால் மட்டுமே கரோனா தடுப்பு முழுமை பெறும்

கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையின் ஒருபகுதியாக, நாடு முழுவதும் கடந்த மார்ச் 24-ம் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. இதனால் ரயில், பேருந்து போன்ற பொதுப் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், பல்வேறு தரப்பினரின் கோரிக்கையை ஏற்று, மாவட்ட எல்லைக்குள் 60 சதவீத பயணிகளுடன் பேருந்துகளை இயக்க தமிழக அரசு அனுமதி அளித்தது.

நீண்ட நாட்களுக்கு பிறகு அரசுப் பேருந்துகளின் சேவை கடந்த 1-ம் தேதி தொடங்கியது. அப்போது, 3 இருக்கைகள் உள்ள இடத்தில் 2 பேரும், இரண்டு இருக்கைகள் உள்ள இடத்தில் ஒருவரும், கடைசி இருக்கையில் 3 பேரும் அமரும்படி குறியீடு அமைக்கப்பட்டு பேருந்துகள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. ஆனால், இந்த விதிகள் எதுவும் பின்பற்றப்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதுதொடர்பாக பயணிகள் சிலர் கூறும்போது, "பேரிடர் நேரம் என்பதால், அரசு தான் இதனை கண்காணிக்க வேண்டும். மூன்று இருக்கைகளிலும் பயணிகள்அமர்ந்தும், முகக் கவசங்கள் அணியாமலும் செல்கின்றனர். மாவட்டங்களுக்கிடையேயான சேவை 7-ம் தேதி (நாளை) தொடங்கும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், திருப்பூர் - ஈரோடு பேருந்து இரு மாவட்ட எல்லையான விஜயமங்கலம் சுங்கச்சாவடி வரை செல்கிறது.

அங்கிருந்து மற்றொரு பேருந்தில் ஈரோடு மாவட்டத்துக்கு சென்று வருகிறார்கள். அதிலும் கட்டுக்கடங்காத கூட்டம் நிரம்பி வழிகிறது. கட்டுப்பாடுகளுடன் கூடிய தளர்வை அரசும், மக்களும் தீவிரமாக பின்பற்றாவிட்டால் கரோனா சமூகப் பரவலின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரிக்கவே செய்யும். பொதுமக்களும் அரசுக்கு ஒத்துழைப்பு தர வேண்டியது அவசியமாகிறது.

பேருந்து நிலையங்களில் போலீஸார் அதிகளவில் குவிக்கப்பட்டு, சமூக இடை வெளியை பயணிகள் கடைப்பிடிப்பதை உறுதி செய்ய வேண்டும்'' என்றனர்.

திருப்பூர் ஆட்சியர் அலுவலக ஊழியர் ஒருவர் கூறும்போது, ‘‘பேருந்துக்குள் முகக் கவசம் அணியாமல் பலர் பயணிக்கின்றனர். இது, கரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவ வழிவகுத்துவிடும்.

நேற்று இயக்கப்பட்ட அரசுப் பேருந்தில் அதிகளவிலான பயணிகள் சென்றனர். மேலும், அனைத்து நிறுத்தங்களிலும் பேருந்துகளை நிறுத்தி பயணிகளை ஏற்றி இறக்குகின்றனர்.

இது பொதுப் போக்குவரத்தை பாதுகாப்புடன் பயன்படுத்த நினைக்கும் பலருக்கும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. நாளை முதல் (செப்.7) மாவட்டங்களுக்கு இடையே பேருந்து போக்குவரத்து முழுவீச்சில் தொடங்கப்பட உள்ள நிலையில், ஆரம்ப கட்டத்திலேயே சரி செய்ய வேண்டியது அரசின் கடமை’’ என்றார்.

அரசுப் போக்குவரத்து கழக திருப்பூர் கிளை மேலாளர் முத்துகிருஷ்ணன் கூறும்போது, "அரசு தரப்பில் பொதுமக்களுக்காக மாவட்ட எல்லை வரை போதிய பேருந்துகள் இயக்கப்படுகின்றன. பேருந்துகளில் சமூக இடைவெளியை கடைப்பிடிப்பது தொடர்பாக காவல் மற்றும் போக்குவரத்து துறையினருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதற்கு பொதுமக்களும் ஒத்துழைப்பு அளித்தால் மட்டுமே கரோனா தடுப்பு நடவடிக்கை முழுமை பெறும்’’ என்றார். இரா.கார்த்திகேயன்


FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x