Published : 06 Sep 2020 08:24 AM
Last Updated : 06 Sep 2020 08:24 AM

மதிப்புக்கூட்டல் தொழில்நுட்பங்களை பகிர்ந்துகொள்ள திருச்சி தேசிய வாழை ஆராய்ச்சி மையத்துடன் ஆந்திர அரசு ஒப்பந்தம்: அறிவுசார் மையத்தை மேம்படுத்த, பயிற்சியளிக்க உதவும்

ஆந்திர மாநில முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையில் நேற்று முன்தினம் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துகொண்ட திருச்சி தேசிய வாழை ஆராய்ச்சி மைய விஞ்ஞானிகள் மற்றும் ஆந்திர அரசின் வேளாண்மைத் துறை அதிகாரிகள்.

திருச்சி

வாழை மதிப்புக்கூட்டலில் புதுமையான தொழில்நுட்பங்களைப் பகிர்ந்துகொள்ள திருச்சி தேசிய வாழை ஆராய்ச்சி மையம் மற்றும்ஆந்திர மாநில அரசு இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் நேற்று முன்தினம் ஆந்திராவில் கையெழுத்தானது.

இந்நிகழ்ச்சியில் ஆந்திர பிரதேச முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி தலைமை வகித்துப் பேசியபோது, “தனியார் நிறுவனங்கள் சமூகம் சார்ந்தவையாக இருக்க வேண்டும். விவசாயிகளின் வருமானத்தை உயர்த்துவதற்கும், புதிய சந்தைகள் மற்றும் தர அடையாளங்களை உருவாக்குவதற்கும் இந்த ஒப்பந்தம் வழிவகுக்க வேண்டும்” என்றார்.

இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் மூலம் திருச்சி தேசிய வாழை ஆராய்ச்சி மையம், ஆந்திர மாநில அரசின் உணவு பதப்படுத்துதல் சங்கத்தின் கீழ் புலிவெண்டலா என்ற இடத்தில் உள்ள அறிவுசார் மையத்தை மேம்படுத்தவும், புதிய நுண் உணவு பதப்படுத்தும் மையத்தை ஏற்படுத்தவும், தொழில்முனைவோருக்கு திறன் மேம்பாட்டு பயிற்சியளிக்கவும் உதவி புரியும்.

இந்நிகழ்வில், ஆந்திர வேளாண்அமைச்சர் கண்ணபாபு, ஆந்திரமாநில வேளாண்மை திட்ட துணைத் தலைவர் எம்.வி.எஸ். நாகிரெட்டி, சிறப்புச் செயலாளர் (உணவு பதப்படுத்துதல்) பூனம் மாலகொண்டையா, ஆந்திர மாநில அரசின்உணவு பதப்படுத்துதல் சங்கத்தின்தலைமை செயல் அலுவலர் ஸ்ரீதர்ரெட்டி, அதிகாரிகள் பங்கேற்றனர்.

காணொலி மூலம் இந்திய வேளாண் ஆராய்ச்சி மைய துணைஇயக்குநர் ஜெனரல் (தோட்டக்கலை அறிவியல்) ஏ.கே.சிங், திருச்சி தேசிய வாழை ஆராய்ச்சி மைய இயக்குநர் எஸ்.உமா ஆகியோர் பங்கேற்றனர். தேசிய வாழைஆராய்ச்சி மையம் சார்பில் மைய விஞ்ஞானிகள் கே.என்.சிவாமற்றும் பி.சுரேஷ்குமார் ஆகியோர் பங்கேற்று புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x