

தமிழக முதல்வர் பழனிசாமி வரும்11-ம் தேதி காஞ்சிபுரம் வருகிறார். இதற்கான ஏற்பாடுகள் குறித்து ஊரக தொழில் துறை அமைச்சர் பெஞ்சமின் நேற்று ஆய்வு செய்தார்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் கரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை பணிகள், வளர்ச்சிப் பணிகள் ஆகியவை குறித்து ஆய்வு செய்ய தமிழக முதல்வர் காஞ்சிபுரம் வருகிறார். அப்போது அவர் பல்வேறுநலத்திட்ட உதவிகளை வழங்கிபுதிய கட்டிடங்களுக்கு அடிக்கல்நாட்டி, கட்டி முடிக்கப்பட்ட கட்டிடங்களை திறந்தும் வைக்கிறார்.
இதற்காக காஞ்சிபுரம் மாவட்டத்தில் பிரம்மாண்ட பந்தல் அமைக்கும் பணிகளும், பழைய கட்டிடங்கள் சிலவற்றுக்கு வண்ணம் பூசும் பணிகளும் நடைபெற்று வருகின்றன. பந்தல் அமைப்பதற்கு இடையூறாக இருக்கும் மரக்கிளைகள் அகற்றப்பட்டு வருகின்றன.
இந்த முன்னேற்பாட்டுப் பணிகளை ஊரக தொழில் துறை அமைச்சர் பெஞ்சமின் நேற்று ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது ஆட்சியர் பொன்னையா, காவல் கண்காணிப்பாளர் சண்முகப் பிரியா, மாவட்ட அதிமுக செயலர் வி.சோமசுந்தரம், மத்தியகூட்டுறவு வங்கித் தலைவர் வாலாஜாபாத் பா.கணேசன், ஸ்ரீபெரும்புதூர் எம்எல்ஏ கே.பழனிஉட்பட பலர் உடன் இருந்தனர்.