Published : 06 Sep 2020 08:05 AM
Last Updated : 06 Sep 2020 08:05 AM

நகர இணைப்பு, குடியிருப்பு சாலைகளில் விதிகளை மீறிய வேகத்தடைகளால் தடுமாறும் வாகன ஓட்டிகள்: சாலை விபத்து ஏற்படுவதாக புகார்

தமிழகத்தில் பல்வேறு நகர இணைப்பு மற்றும் குடியிருப்பு பகுதிகளில் உள்ள சாலைகளில் வேகத்தடைகள் விதிகளை மீறி அமைக்கப்பட்டுள்ளன. இதனால், சில நேரங்களில் விபத்துகள் ஏற்படுவதாக வாகன ஓட்டிகள் புகார் தெரிவிக்கின்றனர்.

தமிழகத்தில் சாலைகளில் வாகனங்கள் மெதுவாகச் செல்லவும், விபத்துகளின்றி பயணம் செய்யவும் பெரும்பாலான இடங்களில் வேகத்தடைகள் அமைக்கப்பட்டுள்ளன. தேசிய, மாநில நெடுஞ்சாலைகளில் அமைக்கப்பட்டுள்ள வேகத்தடைகள் சீராக அமைக்கப்படுவதோடு, தொடர்ந்து பராமரிக்கப்பட்டு வருகின்றன. ஆனால் நகர இணைப்பு, குடியிருப்பு சாலைகளில் வேகத்தடைகள் விதிகளை மீறி அமைக்கப்பட்டுள்ளதால், சாலை விபத்துகள் ஏற்படுவதாக புகார் எழுந்துள்ளது.

இந்தியன் ரோடு காங்கிரஸ் (ஐஆர்சி) என்ற அமைப்பு மூலம் சாலை கட்டமைப்பு, சாலை பராமரிப்பு மற்றும் மேம்படுத்துதல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஆனால், ஐஆர்சி வழங்கும் விதிமுறைகள் முறையாக பின்பற்றப்படுவதில்லை. குறிப்பாக, சென்னையில் 400-க்கும் மேற்பட்ட இடங்களில் வேகத்தடைகள் இருக்கின்றன. இந்த வேகத்தடைகள் சில இடங்களில் ஐஆர்சி விதிமுறைப்படி அமைக்கப்படவில்லை.

வேகத்தடைகள் 3.7 மீட்டர் அகலத்திலும், உயரம் 10 சென்டி மீட்டருக்கு மிகாமலும் அமைக்கப்பட வேண்டும் என்பது விதிமுறை. வேகத்தடை பளிச்சென்று தெரியும்படி வர்ணம் பூசப்பட வேண்டும். இரவில் ஒளிரும்படி விளக்குகள் பொருத்தப்பட வேண்டும். வேகத்தடைக்கு முன்பு 40 மீட்டர் தூரத்தில் வேகத்தடை இருப்பது பற்றி எச்சரிக்கை பலகை வைக்க வேண்டும். ஆனால், பெரும்பாலான நகர இணைப்பு மற்றும் குடியிருப்பு சாலைகளில் இருக்கும் வேகத்தடைகளில் இந்த விதிமுறைகளை பின்பற்றுவதில்லை என புகார் எழுந்துள்ளன.

இதுதொடர்பாக வாகன ஓட்டிகள் சிலர் கூறும்போது, “வாகனங்களின் வேகத்தை குறைத்து, பாதுகாப்பாக பயணம் செய்யவே, வேகத்தடைகள் அமைக்கப்படுகின்றன. மத்திய, மாநில நெடுஞ்சாலைகள், மாவட்ட சாலைகளில் வேகத்தடைகள் விதிமுறைகள்படி அமைக்கப்பட்டு, தொடர்ந்து பராமரிக்கப்பட்டு வருகின்றன. ஆனால், நகர இணைப்பு மற்றும் குடியிருப்புகளுக்கு செல்லும் சாலைகளில் அளவுக்கு அதிகமான உயரத்தில் வேகத்தடைகள் அமைக்கப்பட்டுள்ளன.

இதனால் இரவில் பயணம் செய்யும்போது, வேகத்தடைகள் இருப்பது தெரிவதில்லை. இதனால், சில நேரங்களில் வாகனங்களை ஓட்டும்போது தடுமாற்றம் ஏற்பட்டு, சாலை விபத்துகள் ஏற்படுகின்றன. எனவே, நெடுஞ்சாலைகளில் வேகத்தடைகளை பராமரிப்பது போல், மற்ற சாலைகளில் இருக்கும் வேகத்தடைகளையும் பராமரிக்க வேண்டும்’’ என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x