Published : 06 Sep 2020 07:54 AM
Last Updated : 06 Sep 2020 07:54 AM

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் குறைந்த அளவில் மின்சார ரயில்கள் இயக்க தயாராகும் தெற்கு ரயில்வே

ஊரடங்கில் இருந்து தளர்வு அளிக்கப்பட்டுள்ள நிலையில், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் முதல்கட்டமாக குறைந்த அளவில் மின்சார ரயில்களை இயக்க தெற்கு ரயில்வே தயாராகி வருகிறது.

தமிழகத்தில் கரோனா ஊரடங்கில் தளர்வு அளிக்கப்பட்டுள்ள நிலையில், பேருந்து, ரயில் பொதுபோக்குவரத்தை மாநிலத்துக்குள் இயக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. அதன்படி, வரும் 7-ம் தேதி முதல் தமிழகத்தில் 13 சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளன.

இதற்கிடையே, சென்னை மற்றும் புறநகர் பகுதியில் முக்கிய போக்குவரத்து வசதியாக இருக்கும் மின்சார ரயில் சேவையை தொடங்குவது குறித்து தெற்கு ரயில்வே ஆலோசனை நடத்தி வருகிறது. மேலும், மின்சார ரயில் சேவை மீண்டும் தொடங்குவதற்கு ரயில்வே வாரியத்துக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

சென்னையில் இருந்து புறநகர் பகுதிகளுக்கு தினமும் 450-க்கும் மேற்பட்ட மின்சார ரயில்களின் சேவைகளில் 8 லட்சம் பேர் பயணம் செய்து வந்தனர். தற்போது, கரோனா தாக்கம் அதிகமாக இருப்பதால், முதல்கட்டமாக குறைந்த அளவிலேயே மின்சார ரயில்கள் இயக்கப்படவுள்ளன. இதற்காக, மின்சார ரயில்களில் தூய்மை மற்றும் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதுதொடர்பாக ரயில்வே அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘ரயில் போக்குவரத்து வசதியை தமிழகத்துக்குள் தொடங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளதால், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மின்சார ரயில் சேவை மீண்டும் தொடங்குவது குறித்து ரயில் வாரியத்திடம் அனுமதி கேட்டுள்ளோம். எனவே, வாரியத்தின் அனுமதி வந்தவுடன் மின்சார ரயில் சேவை மீண்டும் தொடங்கப்படும். இன்னும் ஓரிரு நாளில் இதற்கான பதில் வரும் என எதிர்பார்க்கிறோம்’’ என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x