

வ.உ.சி. பிறந்த தினமாக செப்.5-ம் தேதியை தேசிய வழக்கறிஞர் தினமாக அறிவிக்க வேண்டும் என அவரது கொள்ளு பேத்தி செல்வி தெரிவித்தார்.
கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனாரின் மூத்த மகன் ஆறுமுகம். இவரது மகன் உலகநாதனின் மகள் செல்வி. இவர் கோவில்பட்டி லாயல்மில் காலனியில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார்.
வ.உ.சி.யின் 149-வது பிறந்த நாளை முன்னிட்டு, செல்வி, அவரது கணவர் வழக்கறிஞர் போ.முருகானந்தம் ஆகியோர் ஓட்டப்பிடாரத்தில் உள்ள நினைவு இல்லத்துக்கு சென்று வ.உ.சி. சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
தொடர்ந்து கோவில்பட்டியில் உள்ள அவர்களது வீட்டில் வ.உ.சி. படத்துக்கு மரியாதை செலுத்தினர். அப்போது வ.உ.சி.யின் கொள்ளு பேத்தி செல்வி செய்தியாளர்களிடம் கூறும்போது, ஆங்கிலேயர் காலத்தில் சுதேசி கப்பல் நிறுவனத்தை தொடங்கியவர் வ.உ.சி. அவர் வழக்கறிஞராக பணியாற்றியபோது, ஏழை மக்களுக்காக வாதாடி உள்ளார்.
வ.உ.சி. பிறந்த தினமாக செப்.5-ம் தேதி தேசிய வழக்கறிஞராக தினமாக மத்திய அரசு அறிவிக்க வேண்டும்.
சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்ற தென்னிந்திய தியாகிகளை சிறப்பிக்கும் வண்ணமும், அவர்ளின் தியாக வரலாறுகளை அடுத்த வரும் சந்தியினரும் அறிந்து கொள்ளும் வண்ணம் தேவையான நடவடிக்கையை மத்திய அரசு எடுக்க வேண்டும், என்றார் அவர்.