பொறியியல் கல்லூரி மாணவர்களின் தேர்ச்சி அறிவிப்பை உறுதிப்படுத்த வேண்டும்: முத்தரசன் வலியுறுத்தல்

இரா.முத்தரசன்: கோப்புப்படம்
இரா.முத்தரசன்: கோப்புப்படம்
Updated on
1 min read

பொறியியல் கல்லூரி மாணவர்களின் தேர்ச்சி அறிவிப்பை உறுதிப்படுத்த வேண்டும் என, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக, இரா.முத்தரசன் இன்று (செப். 5) வெளியிட்ட அறிக்கை:

"கரோனா நோய் பெருந்தொற்றுப் பரவல் காரணமாக பள்ளிகள், கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. இதனால் ஏற்பட்ட அசாதாரண சூழலில் தேர்வு நடத்த முடியாத நெருக்கடி ஏற்பட்டது.

இந்தப் பேரிடர் காலத்தில் மாணவ சமூகத்தின் எதிர்கால நலன் கருதி, தேர்வுகள் நடத்தாமல், மாணவர்கள் முந்தைய தேர்வுகளில் பெற்ற மதிப்பெண்கள், வருகை தந்த நாட்கள் போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டு அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

இறுதியாக, அண்ணா பல்கலைக்கழகம் உட்பட பொறியியல் கல்லூரிகளில் பயின்று வரும் மாணவர்கள் இறுதிப் பருவத் தேர்வு தவிர மற்ற தேர்வுகளை ரத்து செய்து, தனித் தேர்வர்கள் உட்பட அனைவரும் அடுத்த நிலைக்குத் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இதில் தனித் தேர்வு எழுத தேர்வுக் கட்டணம் செலுத்தியிருக்க வேண்டும் என்ற நிபந்தனை விதிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், அரியர் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டதும், மாணவர்கள் தேர்ச்சி பெற்றதாக அறிவித்துள்ளதும் யுஜிசி மற்றும் ஏஐசிடிஇ விதிமுறைகளுக்கு எதிரானது என பல்கலைக்கழக இயக்குநர் அறிவித்திருப்பதும், இது தொடர்பாக உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருப்பதும், மாணவர்கள், பெற்றோர்கள் மத்தியில் பெருங்குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்தச் சூழ்நிலையில், பொறியியல் மாணவர்கள் தேர்ச்சி அறிவிப்புக்கு, யுஜிசி மற்றும் ஏஐசிடிஇ அமைப்புகள் ஒப்புதல் தெரிவித்து அறிவிப்பு வெளியிடவும், இதுவரை தனித் தேர்வு எழுத, தேர்வுக் கட்டணம் செலுத்த இயலாத மாணவர்களிடம், தேர்வுக் கட்டணத்தை வசூலித்து, அவர்களையும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கவும் மத்திய, மாநில அரசுகள் உடனடி நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயற்குழு கேட்டுக் கொள்கிறது".

இவ்வாறு முத்தரசன் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in