Published : 05 Sep 2020 01:40 PM
Last Updated : 05 Sep 2020 01:40 PM

பி.எம். கிசான் திட்டத்தில் முறைகேடு: கரூர் மாவட்டத்தில் 85 பேர் வங்கிக் கணக்கில் இருந்து ரூ.3.40 லட்சம் மீட்பு

கரூர் மாவட்டத்தில் பி.எம். கிசான் திட்டத்தில் நடைபெற்ற முறைகேட்டில் 85 பேரின் வங்கிக் கணக்கில் இருந்து ரூ.3.40 லட்சம் மீட்கப்பட்டது.

கரூர் மாவட்டத்தில் பி.எம். கிசான் திட்டத்தின் கீழ் 78 ஆயிரத்து 517 நபர்கள் பதிவு செய்து நிவாரணத் தொகை பெற்று வருகின்றனர். இதில், கடந்த ஏப்ரல் முதல் ஆகஸ்ட் மாதம் வரை 3,282 பேர் புதிதாகப் பதிவு செய்துள்ளனர். தமிழகம் முழுவதும் பிரதம மந்திரி கிசான் திட்டத்தில் முறைகேடு தொடர்பாக விசாரணை நடத்த அரசு உத்தரவிட்டதை அடுத்து கரூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இவற்றில், கடந்த ஏப்ரல் மாதம் முதல் ஆகஸ்ட் வரை புதிதாகப் பதிவு செய்தவர்களில் கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு குடும்பத்தில் உள்ள இருவர் என 1,400 பேரும், வெளிமாவட்டங்களைச் சேர்ந்த 500 பேர் என மொத்தம் 1,900 பேர் முறைகேடாகப் பயன்பெறுவது தெரியவந்துள்ளது. இவர்களுக்கு இரு தவணைகளாக ரூ.76 லட்சம் வரை வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளன.

முறைகேடாகப் பயன்பெற்றவர்களின் வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்ட பணம் எடுக்கப்படாமல் இருந்தால் அதனைத் திரும்பப் பெறுவதற்கும், பணம் எடுக்கப்பட்டிருந்தால் அவர்களிடம் இருந்து பணத்தைத் திரும்பப் பெறவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

கரூர் மாவட்டத்தில் முதல் கட்டமாக இன்று (செப். 5) ஒரு நாளில் 85 பேரின் வங்கிக் கணக்குகளில் இருந்து ரூ.3.40 லட்சம் மீட்கப்பட்டது. மோசடி செய்த மற்றவர்களின் வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்ட பணத்தை மீட்கும் நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x