Last Updated : 05 Sep, 2020 12:50 PM

 

Published : 05 Sep 2020 12:50 PM
Last Updated : 05 Sep 2020 12:50 PM

42 ஆண்டுகளாக வெளிவரும் கையெழுத்து இதழ் நவீன் தொழில்நுட்பங்கள் வந்த நிலையிலும் குறையாத வரவேற்பு

விஜயபுரத்தில் தனது வீட்டில் கையெழுத்து இதழை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள எம்.எஸ்.கோவிந்தராஜ்.

புதுக்கோட்டை

புதுக்கோட்டை மாவட்டத்தில் 42 ஆண்டுகளாக வெளிவரும் ‘தாழம்பூ’ என்ற கையெழுத்து இதழானது, கரோனா காலத்திலும் உயிரோட்டத்துடன் வெளிவந்து கொண்டு இருக்கிறது.

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே உள்ள வடக்கு விஜயபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் எம்.எஸ்.கோவிந்தராஜ்(62). பியுசி வரை படித்துள்ள இவர், கடந்த 42 ஆண்டுகளாக ‘தாழம்பூ’ என்ற 32 பக்கங்களைக் கொண்ட கையெழுத்து இதழை நடத்தி வருகிறார்.

இந்த இதழில் இடம்பெறச் செய்ய தமிழகம் மட்டுமின்றி வெளி நாடுகளைச் சேர்ந்த தமிழர்களும் தங்களது படைப்புகளை அனுப்பி வருகின்றனர். எத்தனையோ நவீன தொழில்நுட்பங்கள் வந்துவிட்ட நிலையிலும்கூட கையெழுத்து இதழுக்கு இன்றளவும் உள்ள வரவேற்பு சிற்றிதழ் ஆர்வலர் களுக்கு நம்பிக்கையை ஏற்படுத் துவதாக உள்ளது.

இதுகுறித்து, ‘இந்து தமிழ்’ நாளிதழிடம் கோவிந்தராஜ் கூறிய தாவது: சிறுவயதில் ‘அணில்’, ‘முயல்’, ‘அம்புலிமாமா’ போன்ற புத்தகங்களை வாசிப்பதுண்டு. அந்த வகையில் கடந்த 1976-ல் நான் 8-ம் வகுப்பு படித்துக்கொண்டு இருந்தபோது, வாசகர்கள் கேள்விகளை அனுப்பினால் நடிகர் கமல்ஹாசன் பதிலுடன் வெளிவரும் என முயல் இதழில் குறிப்பிடப்பட்டு இருந்தது.

இதையடுத்து, பிரதமர் இந்திராகாந்தியால் கொண்டு வரப்பட்ட 20 அம்சத் திட்டம் குறித்து உங்கள் கருத்து என்ன? என்று கேட்டு கேள்வி ஒன்றை அனுப்பி இருந்தேன். அதற்கு, எனக்கு தொண்டை வலி இருப்பதால் பின்னர் பதிலளிக்கிறேன் என்று பதில் வந்திருந்தது. இதுவே, தொடர்ந்து இதழ்களை வாசிக்க தூண்டியதோடு, புதிய இதழை உருவாக்கும் முயற்சியிலும் ஈடுபடச் செய்தது.

1977-ல் தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணியில் இருந்து வெளிவந்த ‘தென்றல்’ எனும் கையெழுத்து சிற்றிதழைப் பார்த்து ‘தாழம்பூ’ எனும் பெயரில் முதல் கையெழுத்து இதழை கார்பன் பேப்பர்களை வைத்து நகலெடுத்து வெளியிட்டேன். இதழுக்கு பிலிப்பைன்ஸ் தமிழ் வானொலி மூலம் பாராட்டு கிடைத்ததால் வாசகர்கள் வட்டம் பெருகி யது.

அரசியலைத் தவிர்த்து, கவிதை, கட்டுரை, நேர்காணல், எழுத்தாளர்களின் படைப்புகள் என கலை இலக்கியம் குறித்து எழுதி வருகிறேன். குறிப்பாக, மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம், மறைந்த முதல்வர் ஜெயலலிதா மற்றும் பிரபலமான எழுத்தாளர்கள், கலை இலக்கிய ஆர்வலர்களும் எனது கையெழுத்து இதழைப் பாராட்டி உள்ளனர்.

ஒவ்வொரு மாதமும் 150 பிரதிகளை நகலெடுத்து சந்தாதாரர்கள் உள்ளிட்டோருக்கு அஞ்சலில் அனுப்பி வைத்து வருகிறேன். மாதந்தோறும் வெளிவந்த இந்த இதழ், கடந்த 2010-க்குப் பிறகு எனக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் இரு மாதங்களுக்கு ஒரு இதழ் என வெளிவந்துகொண்டு இருக்கிறது.

42 ஆண்டுகளில் 381 இதழ்கள் வெளிவந்துள்ளன. அனைத்துமே எனது கைப்பட எழுதி, நகலெடுக்கப்பட்டவை. இதழ்களையும், எழுதப் பயன்படுத்திய நூற்றுக்கணக்கான பேனாக் களையும் பொக்கிஷமாக பாது காத்து வைத்திருக்கிறேன். கஜா புயலுக்கு வீட்டு ஓடுகளெல்லாம் சேதமடைந்த நிலையிலும் அதிர்ஷ்டவசமாக கையெழுத்து இதழ்கள் தப்பிவிட்டன.

கரோனா காலத்தில் பிரபலமான பல்வேறு இதழ்கள் கூட வெளியாகாத நிலையில், தாழம்பூ கையெழுத்து இதழ் உயிரோட்டத்துடன் வெளியான வண்ணம் உள்ளது. எனது கையெழுத்து இதழ் குறித்து மோகனா, சந்திரசேகர் ஆகியோர் முனைவர் பட்டத்துக்காக ஆய்வு செய்துள்ளனர்.

இதுவரை வெளிவந்த கையெழுத்து இதழ்களை பாதுகாப் பதற்காக www.thaazhampoo.com எனும் இணையதளத்தில் படைப்புகளை பதிவேற்றும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தாழம்பூ இதழ் தொடங்க காரணமாக இருந்த இதழ்களெல்லாம் நின்று விட்டன.

வயது முதிர்விலும் வருமானமில்லாத நிலையிலும் தமிழ் வளர்ச்சிக்காக கையெழுத்து இதழை நடத்திவரும் எனக்கு தமிழ் வளர்ச்சித் துறையின் வாயிலாக அரசு உதவி செய்ய வேண்டும் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x