Published : 05 Sep 2020 12:02 PM
Last Updated : 05 Sep 2020 12:02 PM

குறுந்தொழில் நிறுவனங்களுக்கு வங்கிக்கடன் வழங்க வலியுறுத்தல்

தமிழ்நாடு கைத்தொழில் மற்றும் குறுந்தொழில் முனைவோர் சங்கத்தின் தலைவர் ஜே.ஜேம்ஸ் கூறும்போது,‘‘ ஊரடங்கு பிறப்பிக்கப் பட்ட முதல் 90 நாட்களுக்கு தொழில்நிறுவனங்கள் முற்றிலும் இயங்கவில்லை. அதைத் தொடர்ந்து அமல்படுத்தப்பட்ட தளர்வுகளால், தொழில் நிறுவனங்கள் இயங்கினாலும், ஊரடங்குக்கு முன்னர் 100 சதவீதம் உற்பத்தி செய்த பெரு நிறுவனங்கள், ஊரடங்குக்கு பின்னர் தங்களது உற்பத்தியை 35 சதவீதமாக குறைத்துக்கொண்டன. இவர்களை நம்பி ஜாப்-ஆர்டர் எடுத்துள்ள எங்களைப் போன்ற குறு, சிறு தொழில் நிறுவனங்களுக்கு ஆர்டர் அளவு குறைந்து வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

இதிலிருந்து மீண்டுவர மத்தியஅரசு அவசர கால வங்கிக் கடன்உதவித் திட்டத்தை அறிமுகப்படுத்தியது. வங்கியில் பெற்ற இயந்திரக் கடன், மூலதனக் கடன் அடிப்படையில், அதை சரியாக கடந்த பிப்ரவரி மாதம் வரை செலுத்தியிருந்தால், மொத்த கடன் தொகையில் இருந்து 20 சதவீதம் தொகையை கடனாக வங்கிகள் வழங்குகின்றன. இதன் மூலம் பெரிய நிறுவனங்கள் பயன் பெறுகின்றன. ஆனால், சொந்த தொகையை முதலீடு செய்தும், தனியார் நிதி நிறுவனங்களிடம் கடன் வாங்கியும் தொழில் நிறுவனங்களை தொடங்கிய குறு, சிறு தொழில் நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள் மேற்கண்ட வகையிலான வங்கிக் கடனை பெற முடியவில்லை.

குறு, சிறு தொழில் நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள் தங்களது பகுதிகளில் உள்ள வங்கிகளில் நடப்புக் கணக்கை பின்பற்றி, ஆண்டுக்கு பல லட்சங்கள் வரவு- செலவு காட்டுகின்றனர். இதன் அடிப்படையில், குறு, சிறு தொழில் நிறுவனங்களுக்கு 25 சதவீதம் வங்கிக்கடன் வழங்க வலியுறுத்தி வருகிறோம். ஜாப்-ஆர்டர்குறைவு, வருவாய் இழப்பு, வங்கிக்கடன் இல்லாதது, மின் கட்டணவிலக்கு இல்லாதது போன்றவற்றால் கடும் நெருக்கடியை எதிர்கொண்டுள்ளோம். இதை சமாளிக்க வட்டிக்கு கடன் வாங்கியும், நகைகளை அடகு வைத்தும் தொழில் நிறுவனங்களை மீட்க போராடி வருகிறோம். மத்திய, மாநில அரசுகள் குறு, சிறு தொழில் நிறுவனங்களைச் சேர்ந்தவர்களுக்கு, அவர்களின் வங்கி வரவு-செலவு அடிப்படையில் கடன் வழங்கவும், மின் கட்டணத்தில் இருந்து விலக்கு அளிக்கவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x