Published : 05 Sep 2020 07:52 AM
Last Updated : 05 Sep 2020 07:52 AM

தமிழகம் முழுவதும் ஏற்பாடுகள் தீவிரம்; விரைவு பேருந்து நாளை இரவு முதல் இயக்கம் முதல் நாளிலேயே 3,000 பேர் முன்பதிவு

தமிழகத்தில் நீண்ட தூரம் செல்லும் அரசு விரைவு, சொகுசுப் பேருந்துகள் நாளை நள்ளிரவு முதல் இயக்கப்பட உள்ளன. இதற்கான முன்பதிவு நேற்று தொடங்கியது. முதல் நாளிலேயே 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் முன்பதிவு செய்துள்ளனர்.

கரோனா ஊரடங்கில் பல்வேறு தளர்வு அளிக்கப்பட்டுள்ளது. தற்போது மாவட்டங்களுக்குள் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. வரும் 7-ம் தேதி முதல் மாவட்டங்களுக்கு இடையேயும் அரசு, தனியார் பேருந்துகள், ரயில்கள் இயக்கப்படும் என்று முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார். இதற்கான அரசாணையை தமிழக அரசு நேற்று வெளியிட்டது.

இதற்கிடையே, வரும் 6-ம்தேதி (நாளை) நள்ளிரவு முதல்நீண்ட தூரம் செல்ல வேண்டிய தொலைதூர அரசு விரைவு, சொகுசு பேருந்துகளை இயக்கஅரசு போக்குவரத்து கழகங்கள் தயாராகி வருகின்றன. அதன்படி,தமிழக அரசு விரைவு போக்குவரத்து கழகம் மூலம் சென்னை, திருச்சி, திருநெல்வேலி, மதுரை, கோவை, திருப்பூர், தஞ்சாவூர் உள்ளிட்ட இடங்களுக்கு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. இதற்கான டிக்கெட் முன்பதிவு நேற்று மதியம் தொடங்கியது.

இதுதொடர்பாக கேட்டபோது, அரசு விரைவு போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறியதாவது:

தமிழக அரசு உத்தரவுப்படி, மாவட்டங்களுக்கு இடையே விரைவு, சொகுசு பேருந்துகள் வரும் 6-ம் தேதி நள்ளிரவு முதல்இயக்கப்பட உள்ளன. வெளி மாநிலங்களுக்கு பேருந்துகள் இயக்கப்படாது. கரோனாமுன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றுவதோடு, தமிழகஅரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி, பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

ஆயிரத்துக்கும் மேற்பட்ட விரைவு பேருந்துகள் உள்ளன. இருப்பினும், பயணிகளின் தேவையை கருத்தில் கொண்டே பேருந்துகள் இயக்கப்படும்.

விரைவு பேருந்துகளில் பயணிக்க முன்பதிவு மையங்கள் மற்றும் இணையதளத்தில் (www.tnstc.in) பொதுமக்கள் டிக்கெட் முன்பதிவு செய்து வருகின்றனர். முன்பதிவு தொடங்கிய முதல் நாளிலேயே 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் டிக்கெட் முன்பதிவு செய்துள்ளனர்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x