Published : 05 Sep 2020 07:37 AM
Last Updated : 05 Sep 2020 07:37 AM

தமிழகத்தில் ஊரடங்கு தளர்வால் அதிகரிக்கும் விற்பனை: ஆர்டிஓ அலுவலகங்களில் வாகன பதிவு உயர்வு

கரோனா ஊரடங்கு தளர்வால் வாகனங்கள் விற்பனை மெல்ல அதிகரிக்க தொடங்கியுள்ளதால், ஆர்டிஓ அலுவலகங்களில் (வட்டாரபோக்குவரத்து அலுவலகம்) மீண்டும் வாகன பதிவு அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.

கரோனா ஊரடங்கால், மார்ச்,ஏப்ரல் மாதங்களில் மற்ற தொழில்களைவிட ஆட்டோமொபைல் துறை பெரும் நெருக்கடியைச் சந்தித்தது. இதனால், வாகன விற்பனையும் குறைந்து, ஆர்டிஓ.களில் வாகன பதிவு எப்போதும் இல்லாத அளவுக்கு குறைந்தது.

இதற்கிடையே, கரோனா ஊரடங்கில் தளர்வு அளிக்கப்பட்டதால், கடந்த மே மாதம் 2-வது வாரம் முதல் குறைந்த ஊழியர்களைக் கொண்டு ஆர்டிஓ அலுவலகங்கள் மீண்டும் செயல்படத் தொடங்கின.இதேபோல், வாகனங்களின் உற்பத்தியும் படிப்படியாக தொடங்கியது. பேருந்துகள், ரயில்கள் நீண்ட நாட்கள் ஓடாத நிலையிலும், கரோனா முன்னெச்சரிக்கை காரணமாக புதிய வாகனங்கள் மற்றும்பழைய வாகனங்கள் வாங்குவோர் எண்ணிக்கை மீண்டும் அதிகரித்துள்ளது. இதனால், வாகன பதிவுஅதிகரிக்க தொடங்கிஉள்ளது.

இதுதொடர்பாக வாகன விற்பனையாளர்கள் சிலர் கூறும்போது, ‘‘கரோனா ஊரடங்கு தளர்வுஅளிக்கப்பட்டுள்ளதால், வாகனங்கள் விற்பனை மீண்டும் பழைய படி நடக்கிறது. ரயில்கள், பேருந்துகள் ஓடாததால், இருசக்கர வாகனங்கள், கார்கள் புதியதாக வாங்கி செல்கின்றனர்’’என்றனர்.

இது தொடர்பாக போக்குவரத்து ஆணையரக அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘கரோனா ஊரடங்கு தளர்வு அளிக்கப்பட்டுள்ளதால், ஆர்டிஓ.களில் வாகனங்கள் பதிவுமீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. அடுத்த சில மாதங்களில் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கிறோம்’’ என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x