Published : 04 Sep 2020 07:21 PM
Last Updated : 04 Sep 2020 07:21 PM

தேசிய கல்விக் கொள்கை தொடர்பாக தமிழக அரசு அமைத்திருப்பது கல்வியாளர் குழுவா? கண்துடைப்புக் குழுவா?- திருமாவளவன் கேள்வி

திருமாவளவன்: கோப்புப்படம்

சென்னை

தேசிய கல்விக் கொள்கை தொடர்பாக தமிழக அரசு அமைத்திருப்பது கல்வியாளர் குழுவா? கண்துடைப்புக் குழுவா? என, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் மக்களவை உறுப்பினருமான திருமாவளவன் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பாக, தொல்.திருமாவளவன் இன்று (செப். 4) வெளியிட்ட அறிக்கை:

"தேசிய கல்விக் கொள்கை என்ற பெயரில் இந்தியைத் திணிப்பதற்கும் ஏழை, எளிய மக்களின் கல்வி உரிமையை அழிப்பதற்கும் பாஜக அரசு திட்டமிட்டுச் செயல்பட்டு வருகிறது. அதற்குக் கடுமையான எதிர்ப்பு எழுந்த நிலையில், தமிழக அரசு இப்போது தேசிய கல்விக் கொள்கையைப் பரிசீலிப்பதற்காகக் குழு ஒன்றை அமைத்துள்ளது. அந்தக் குழுவில் கல்விப் பிரச்சினைகள் குறித்து அக்கறை கொண்ட கல்வியாளர்கள் எவரும் இல்லை. பள்ளிக் கல்வி தொடர்பானவர்களும் இடம்பெறவில்லை. எனவே, அந்தக் குழுவை மாற்றியமைக்க வேண்டுமெனத் தமிழக அரசை வலியுறுத்துகிறோம்.

தமிழக அரசு சார்பில் அமைக்கப்பட்டுள்ள குழுவில் முன்னாள் துணைவேந்தர்கள் சிலரும் தற்போதைய துணைவேந்தர்கள் சிலரும் மட்டுமே இடம் பெற்றுள்ளனர். அவர்களெல்லாம் பாஜக ஆதரவாளர்கள் என்ற குற்றச்சாட்டுக்கு உள்ளானவர்கள். அவர்களில் எவரும் கல்விப் பிரச்சினைகள் குறித்து அக்கறை காட்டியவர்களில்லை. அவர்களைக்கொண்டு குழு அமைத்திருப்பது இந்த கல்விக் கொள்கையை ஏற்றுக்கொள்ள அதிமுக அரசு தயாராகிவிட்டது என்பதையே காட்டுகிறது.

தேசிய கல்விக் கொள்கை பள்ளிக்கல்வி மீது ஏற்படுத்தப்போகும் பாதிப்புத்தான் ஒப்பீட்டளவில் மிகவும் அதிகம். இந்தி திணிப்புக்கான மும்மொழித் திட்டம்; இடைநிற்றலை அதிகரிக்கச் செய்யக்கூடிய 3,5, 8 ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு என்று பல்வேறு மக்கள் விரோதத் திட்டங்கள் பள்ளிக் கல்வியில் அறிவிக்கப்பட்டுள்ளன.

தற்போது தமிழக அரசு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ள குழுவில் பள்ளிக் கல்வி தொடர்பான வல்லுநர்கள் எவரும் இடம் பெறாதது இந்தக் குழு பெயரளவுக்கு அமைக்கப்பட்ட குழுவோ என்ற ஐயத்தை வலுப்படுத்துகிறது.

தமிழக அரசு இந்தித் திணிப்பை எதிர்ப்பது உண்மையென்றால் இந்தியைத் திணிக்கும், மாநில உரிமைகளைப் பறிக்கும் இந்த கல்விக் கொள்கையை நிராகரிக்கிறோம் என அறிவிக்க வேண்டும். அதை விட்டுவிட்டு, ஒருபுறம் இந்தித் திணிப்புக்கு ஆதரவில்லை என்பதும், இன்னொரு பக்கம் தேசிய கல்விக் கொள்கையைப் பரிசீலிக்கக் குழு அமைப்பதும் போன்ற நடவடிக்கைகளால் அதிமுகவும் சங் பரிவார அமைப்புகளில் ஒன்றாக மாறிவிட்டதோ எனக் கருதத் தோன்றுகிறது.

அதிமுக அரசின் இந்த இரட்டை நிலைப்பாட்டை ஏய்ப்பு அணுகுமுறையைத் தமிழக மக்கள் அடையாளம் கண்டுகொள்வார்கள் என்பதைச் சுட்டிக்காட்ட விழைகிறோம்".

இவ்வாறு திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x