Published : 04 Sep 2020 07:03 PM
Last Updated : 04 Sep 2020 07:03 PM

சென்னையில் பாதுகாப்பு விதிமுறைகளைக் கடைப்பிடிக்காத தனிநபர்கள், வணிக நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை: ஹர்மந்தர் சிங் எச்சரிக்கை

பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் முகக்கவசம் அணிதல், தனிமனித இடைவெளி போன்ற அரசு வெளியிட்டுள்ள பாதுகாப்பு நடைமுறைகளைக் கடைப்பிடிக்காத தனிநபர்கள் மற்றும் வணிக நிறுவனங்கள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் ஹர்மந்தர் சிங் தெரிவித்துள்ளார் .

பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் கரோனா வைரஸ் தொற்று தடுப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பான ஆய்வுக் கூட்டம் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் ஹர்மந்தர் சிங் தலைமையில் இன்று (செப். 4) ரிப்பன் மாளிகை கூட்டரங்கில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் ஹர்மந்தர் சிங் தெரிவித்ததாவது:

"தமிழ்நாடு முதல்வரின் ஆலோசனை மற்றும் உத்தரவுகளின்படி, பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கரோனா வைரஸ் தொற்று தடுப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் சராசரியாக நாள்தோறும் 12 ஆயிரம் கரோனா தொற்றுப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன. நாள்தோறும் 500 முதல் 600 காய்ச்சல் முகாம்கள் நடத்தப்படுகின்றன. இதுநாள் வரை 42 ஆயிரத்து 116 காய்ச்சல் முகாம்கள் நடத்தப்பட்டு 22 லட்சத்து 50 ஆயிரத்து 741 நபர்கள் பயனடைந்துள்ளனர். இவர்களில் 1 லட்சத்து 25 ஆயிரத்து 840 நபர்களுக்குக் கரோனா தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மேலும், களப்பணியாளர்கள் மூலம் வீடுகள்தோறும் சென்று கரோனா தொற்று அறிகுறியுள்ள நபர்களும் கண்டறியப்பட்டு பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. அரசின் மேற்குறிப்பிட்ட நடவடிக்கைகளின் காரணமாக வைரஸ் தொற்றிலிருந்து குணமடைவோர் விகிதம் அதிகமாகவும், இறப்பு விகிதம் மிகவும் குறைவாக உள்ளது.

தற்போது ஊரடங்கிலிருந்து பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், பொதுமக்கள் பணி நிமித்தம் காரணமாக அதிக அளவில் வெளியே வருகின்றனர். எனவே பொதுமக்கள் வெளியே வரும்போது கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும். பொது இடங்களில் குறைந்தது 2 மீட்டர் இடைவெளி விட்டு தனிமனித இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும். இது தொடர்பாக பொதுமக்களுக்குக் களப்பணியாளர்கள் மூலமாகவும், தெருக்களில் ஆங்காங்கே விளம்பரத் தட்டிகள் அமைத்தும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

மேலும், முதியோர் இல்லங்கள் உள்ள இடங்களைக் கணக்கெடுத்து அங்கு அதிக கவனம் செலுத்தி கரோனா வைரஸ் தொற்று ஏற்படாத வகையில் விழிப்புணர்வு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

முகக்கவசம் அணியாமல் வெளியே வரும் நபர்களிடம் அபராதமும், தனிமனித இடைவெளியைக் கடைப்பிடிக்காத வணிக நிறுவனங்கள் மற்றும் அங்காடிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டு மூடி சீல் வைக்கப்படும்.

அதேபோன்று, அரசு மற்றும் தனியார் கட்டுமானப் பணிகள் நடைபெறும் இடங்களில் தொழிலாளர்கள் முகக்கவசம் அணிவதை சம்பந்தப்பட்ட வார்டு உதவிப் பொறியாளர் உறுதி செய்ய வேண்டும்.

மேலும், மாநகராட்சியின் பொறியாளர்கள், வருவாய்த் துறை அலுவலர்கள் மற்றும் இதர பணியாளர்கள் அனைத்து பெரு, சிறு வணிக நிறுவனங்களில் முகக்கவசம் அணிதல் மற்றும் தனிமனித இடைவெளி குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.

அரசின் பாதுகாப்பு வழிமுறைகளைக் கடைப்பிடிக்காத தனிநபர் மற்றும் வணிக நிறுவனங்களிடமிருந்து செப். 3 வரை ரூ.1 கோடியே 85 லட்சத்து 67 ஆயிரத்து 117 அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது. இன்று ஒரு நாள் மட்டும் முகக்கவசம் அணியாத 600 தனி நபர்கள் மற்றும் தனிமனித இடைவெளியைக் கடைப்பிடிக்காத வணிக நிறுவனங்களிடமிருந்து ரூ.2 லட்சத்து 45 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.

மேலும், 40 வணிக நிறுவனங்கள் மூடி சீல் வைக்கப்பட்டுள்ளது. அரசின் பாதுகாப்பு வழிமுறைகளைக் கடைப்பிடிக்கத் தவறும் தனிநபர்கள் மற்றும் வணிக நிறுவனங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்".

இவ்வாறு ஹர்மந்தர் சிங் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x