Last Updated : 08 Sep, 2015 03:46 PM

 

Published : 08 Sep 2015 03:46 PM
Last Updated : 08 Sep 2015 03:46 PM

ஆபத்தை உணராமல் தண்டவாளத்தைக் கடக்கும் மாணவர்கள்: நடவடிக்கை எடுக்க பெற்றோர் கோரிக்கை

பள்ளி இடைவெளி நேரத்தில் வெளியே வரும் அரசுப் பள்ளி மாணவர்கள் தின்பண்டம் வாங்க சிக்னலுக்காக காத்திருக்கும் ரயில்களின் பெட்டிகள் மீது ஏறி குதித்துச் செல்கின்றனர். இதைத் தடுக்க வேண்டும் என பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நாட்றம்பள்ளி தாலுகாவுக்கு உட்பட்ட பச்சூர் பகுதியில் அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு பச்சூர், கொண்டகிந்தனப்பள்ளி, பழையபேட்டை, அரசம்பட்டி, பறையூர் மற்றும் சுற்றுவட்டாரத்தில் உள்ள 15-க்கும் மேற்பட்ட கிராமங் களைச் சேர்ந்த சுமார் 900 மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர்.

பள்ளியில் தினந்தோறும் காலை 11.30 மணி முதல் 11.50 மணி வரை தேநீர் இடைவேளை நேரம் ஆகும். பள்ளி அருகேயுள்ள ரயில்வே தண்டவாளத்தை மாணவர்கள் கடந்து அருகில் உள்ள கடைக்குச் செல்கின்றனர். பள்ளி இடைவேளை நேரமான 20 நிமிடங்களுக்குள், கடைக்குச் சென்று திரும்ப வேண்டும் என்பதால் அவசர, அவசரமாக ரயில் பாதைகளைக் கடக்கின்றனர்.

இது குறித்து பெற்றோர் தரப்பில் கூறும்போது, ‘‘தண்டவாளத்தைக் கடக்க வேண்டாம் என்று எங்கள் பிள்ளைகளிடம் கூறி வருகிறோம். அதேநேரத்தில், இடைவேளை நேரத்தில் மாணவர்களை வெளியே அனுப்ப வேண்டாம். மாணவர்களுக்குத் தேவையான தின்பண்டங்களை பள்ளி வளாகத்தைச் சுற்றி அமைக்க பள்ளி நிர்வாகத்திடம் கோரிக்கை வைத்தோம். ஆனால் இதுவரை நடவடிக்கை இல்லை’’ என்றனர்.

இது தொடர்பாக அரசுப் பள்ளி ஆசிரியர்களிடம் கேட்டபோது, ‘‘பள்ளியைச் சுற்றி பெரிய சுற்றுச்சுவர் அமைக்கப்பட்டுள்ளது. பள்ளி வேலை நேரம் முடிந்த பின்னர், பாதுகாப்புடன் வீட்டுக்கு செல்ல வேண்டும் என அறிவுறுத்தி வருகிறோம். தவிர பள்ளி இடைவேளை நேரத்தில் பள்ளி நுழைவு வாயில் எப்போதும் மூடப்பட்டே இருக்கும். சிறிய கேட் வழியாக சிலர் வெளியே செல்கின்றனர். அந்த சிறிய கேட்டும் இனி மூடி வைக்கப்படும்’’என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x