

கூட்ட நெரிசலை குறைப்பதற்காக சென்னையில் இருந்து திருநெல்வேலி மற்றும் திருவனந்தபுரத்துக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளன.
இதுதொடர்பாக தெற்கு ரயில்வே நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
சென்னை எழும்பூரில் இருந்து அடுத்த மாதம் 20-ம் தேதி இரவு 10.45-க்கு புறப்படும் சிறப்பு ரயில் (06092) மறுநாள் மதியம் 12.30-க்கு திருநெல்வேலியை சென்றடையும். அடுத்த மாதம் 25-ம் தேதி திருநெல்வேலியில் இருந்து மதியம் 2.45-க்கு புறப்படும் சுவிதா சிறப்பு ரயில் (00616) மறுநாள் அதிகாலை 4.20க்கு சென்னை எழும்பூரை வந்தடையும்.
முன்பதிவு இன்று தொடக்கம்
அடுத்த மாதம் 23-ம் தேதியன்று சென்னை சென்ட்ரலில் இருந்து மாலை 3.15-க்கு புறப்படும் சிறப்பு விரைவு ரயில் (06093) மறுநாள் காலை 6.30-க்கு திருவனந்தபுரத்தை சென்றடையும். அடுத்த மாதம் 16-ம் தேதியன்று இரவு 7 மணிக்கு சென்னை சென்ட்ரலில் இருந்து புறப்படும் சுவிதா சிறப்பு ரயில் (00617) மறுநாள் காலை 7.45-க்கு திருவனந்தபுரத்தை சென்றடையும். அடுத்த மாதம் 18-ம் மற்றும் 25-ம் தேதிகளில் திருவனந்தபுரத்தில் இருந்து புறப்படும் சுவிதா சிறப்பு ரயில் (00618) மறுநாள் காலை 10 மணிக்கு சென்னை சென்ட்ரலை வந்தடையும். மேற்கண்ட சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு 27-ம் தேதி (இன்று) தொடங்குகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.