Published : 11 Sep 2015 09:20 PM
Last Updated : 11 Sep 2015 09:20 PM

பொறியியல் மாணவர்களுக்கு அக்.1 முதல் மாபெரும் வளாக நேர்முகத் தேர்வு: அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு

பொறியியல் மாணவர்களுக்கு அக்டோபர் 1-ந் தேதி முதல் மிகப்பெரிய அளவில் வளாக நேர்முகத்தேர்வுகள் நடத்தப்படும் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

அண்ணா பல்கலைக்கழகத்தில் இயங்கி வரும் பல்கலைக்கழக தொழில்நிறுவன ஒருங்கிணைப்பு மையம் பொறியியல் படிக்கும் மாணவர்களின் வேலைவாய்ப்புக்கான வளாக நேர்முகத்தேர்வுகளுக்கு (கேம்பஸ் இண்டர்வியூ) ஏற்பாடு செய்கிறது. இதைத்தொடர்ந்து, பல்கலைக்கழகத்திலும், மாநில அளவிலும் வளாக நேர்முகத்தேர்வுகள் நடத்தப்படுகின்றன.

இந்த ஆண்டு மாநில அளவிலான வளாக நேர்முகத்தேர்வை டிசம்பர் மாதத்தில் 3 மண்டலங்களில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதுதொடர்பாக பெரிய நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு மாபெரும் வளாக நேர்முகத்தேர்வுகள் அக்டோபர் 1-ந் தேதி முதல் நடத்தப்படும். இதில், 5 பெரிய நிறுவனங்கள் கலந்துகொண்டு அதிக எண்ணிக்கையிலான பணியாளர்களை தேர்வுசெய்ய இருக்கின்றன.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு மாநில அளவில் 5 பெரிய நிறுவனங்கள் நடத்திய வளாக நேர்முகத்தேர்வுகள் (கேம்பஸ் இண்டர்வியூ) மூலமாக 2,500 மாணவர்கள் வேலைவாய்ப்பு பெற்றதாக அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் எம்.ராஜாராம் தெரிவித்துள்ளார். இறுதி ஆண்டு படிக்கும் மாணவர்களை வேலைவாய்ப்புக்கு தயார்படுத்தும் வகையில் அதற்கு முன்னரே சிறப்புப் பயிற்சிகள் அளிக்கப்படுவதாக பல்கலைக்கழக தொழில்நிறுவன ஒருங்கிணைப்பு மைய இயக்குநர் டி.தியாகராஜன் கூறியுள்ளார்.





FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x