

தென்காசி நகரில் பல்வேறு பகுதிகளில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டு இருந்ததால் அவற்றை அகற்றிவிட்டு ஓவியங்களால் அழகுபடுத்த காவல்துறை, நகராட்சி மற்றும் வருவாய்த் துறை நடவடிக்கை எடுத்தது.
இதற்கு பல்வேறு தன்னார்வ நிறுவனங்களும், பள்ளி மாணவர்களும் தாமாக முன்வந்து உதவினர். பேருந்து நிறுத்த நிழற்குடைகள், குடிநீர் தொட்டிகள், அரசு அலுவலக சுவர்களில் ஒட்டப்பட்ட போஸ்டர்களை பல்வேறு அகற்றிவிட்டு, அங்கு இயற்கைக் காட்சிகள், பாரம்பரிய விளையாட்டுகள், தென்காசி மாவட்ட சுற்றுலாத் தலங்கள் போன்றவற்றை ஓவியங்களாகத் தீட்டினர்.
ஓவியங்களை வரைந்த மாணவர்கள் அதன் அருகில் தங்கள் பெயர்களையும் எழுதிக்கொள்ள அனுமதி வழங்கப்பட்டது. இதனால், ஏராளமான மாணவர்கள் ஆர்வத்துடன் ஓவியங்கள் வரைந்தனர்.
தென்காசியைத் தொடர்ந்து குற்றாலத்திலும் காவல்துறை உதவியுடன் மழை நண்பர்கள் அமைப்பினர் இணைந்து செயல்பட்டு, அரசு சுவர்களில் ஒட்டப்பட்டிருந்த போஸ்டர்களை அகற்றினர். பின்னர், அவற்றில் சுண்ணாம்பு அடித்து ஓவிங்கள் வரையப்பட்டு வருகின்றன. மாணவர்கள் வரைந்து அனுப்பிய ஓவியங்களை தேர்வு செய்து, சுவர்களில் வரைந்துள்ளனர்.
தென்காசி மாவட்டத்தில் உள்ள அருவிகள், அணைகள், இயற்கைக் காட்சியள், விழிப்புணர்வு ஓவியங்கள் உள்ளிட்ட பல்வேறு ஓவியங்களால் சுற்றுலாத் தலமான குற்றாலம் சுவர்கள் பொலிவு பெற்றுள்ளன.
தென்காசியில் தொடங்கிய இந்த சுவர் ஓவியங்கள் குற்றாலம் மட்டுமின்றி செங்கோட்டை நகரத்திலும் இடம்பெறத் தொடங்கியுள்ளன. செங்கோட்டை பகுதியிலும் மழை நண்பர்கள் அமைப்பினர் காவல்துறை மற்றும் மாணவர்கள் இணைந்து போஸ்டர்களை அகற்றிவிட்டு, ஓவியங்களை வரைந்து வருகின்றனர்.
ஒவ்வொரு ஊர்களிலும் தன்னார்வலர்கள், மாணவர்கள் இணைந்து தங்கள் ஊரை அழகுபடுத்த தொடங்கிய முயற்சி பொதுமக்களிடம் வரவேற்பைப் பெற்றுள்ளது.