Published : 04 Sep 2020 10:08 AM
Last Updated : 04 Sep 2020 10:08 AM

சேலத்தில் நள்ளிரவில் தீ விபத்து: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் தீயில் கருகி உயிரிழப்பு

சேலத்தில் நள்ளிரவில் வீடு ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் தீயில் கருகி உயிரிழந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

சேலம் மாநகர், நரசோதிப்பட்டி பகுதியில் குடியிருந்து வருபவர் அன்பழகன் (50). இவருடைய சகோதரர் கார்த்தி (40). இவர்கள் மர அறுவை மில் வைத்து தொழில் செய்து வருகின்றனர். அன்பழகன், அவருடைய மனைவி புஷ்பா (40), மகள் சவுமியா (17) மற்றும் அன்பழகனின் தந்தை சேட்டு, தாய் அமுதா ஆகியோரும், தம்பி கார்த்தி அவருடைய மனைவி மகேஸ்வரி (35), கார்த்தியின் குழந்தைகள் சர்வேஷ் (12), முகேஷ் (10) என இரு குடும்பத்தினரும் பெற்றோருடன் நரசோதிபட்டி, ராமசாமி நகரில் ஒரே வீட்டில் வசித்து வருகின்றனர்.

மாடியில் தாய், தந்தையும், தரை தளத்தில் அன்பழகன், கார்த்தி குடும்பத்தினரும் வசித்து வந்தனர். இந்நிலையில், நேற்று (செப் 3) நள்ளிரவு 12 மணியளவில் அன்பழகனின் வீடு திடீரென தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்தது. இதுகுறித்து அக்கம்பக்கத்தினர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். சேலம் செவ்வாய்பேட்டை தீயணைப்பு நிலையத்திலிருந்தும் சூரமங்கலம் தீயணைப்பு நிலையத்தில் இருந்தும் தீயணைப்பு வீரர்கள், இரு வாகனங்களுடன் உடனடியாக சென்று தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

அப்போது வீட்டுக்குள் சிக்கி இருந்தவர்களை காப்பாற்ற முயற்சித்தனர். இந்நிலையில், வீட்டுக்குள் உறங்கிக்கொண்டிருந்த கார்த்திக், அவருடைய மனைவி மகேஸ்வரி, மகன்கள் சர்வேஷ், முகேஷ் மற்றும் அன்பழகனின் மனைவி புஷ்பா ஆகிய 5 பேரும் தீயில் கருகி உயிரிழந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x