இனி கரோனா பயமின்றி ஏசி பயன்படுத்தலாம்: பாக்டீரியா, வைரஸை அழிக்கும் தொழில்நுட்பத்தைக் கண்டுபிடித்த அழகப்பா பல்கலைக்கழக மாணவர்கள்

பாக்டீரியா, வைரஸை அழிப்பதற்காக ஏசி காற்று சீரமைப்பானில் பொருத்தப்பட்ட எல்இடி பல்புகள்.
பாக்டீரியா, வைரஸை அழிப்பதற்காக ஏசி காற்று சீரமைப்பானில் பொருத்தப்பட்ட எல்இடி பல்புகள்.
Updated on
1 min read

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக மாணவர்கள் ஏசியில் பாக்டீரியா, வைரஸை அழிக்கும் தொழில்நுட்பத்தை கண்டுபிடித்துள்ளனர். இதனால் இனி கரோனா பயமின்றி ஏசியை பயன்படுத்தலாம் என அவர்கள் தெரிவித்தனர்.

ஏசி மூலம் கரோனா வைரஸ் வேகமாகப் பரவுகிறது. இதனால் வணிக நிறுவனங்களில் ஏசி இயக்குவதற்கு அரசு தடை விதித்துள்ளது.

இந்நிலையில் புறஊதாக் கதிர்கள் அடிப்படையில் இயங்கும் காற்று சீரமைப்பானை ஏசியில் பொருத்துவதன் மூலம் பாக்டீரியா, வைரஸ்களை அழிக்க முடியும் என அழகப்பா பல்கலைக்கழக தொழில் முனைவோர் மற்றும் வேலை வாய்ப்பு மைய மாணவர்கள் நிரூபித்து காட்டியுள்ளனர்.

இயற்பியல் பேராசிரியர் சங்கரநாராயணன், புத்தாக்க மைய இயக்குநர் இளங்குமரன் தலைமையில் பயிற்றுநர்கள் அழகுராமன், ஜெயமுருகன், மாணவர்கள் பிரதீஷ், அங்கப்பன், பரணிபடிக்காசு, அழகிரி ஆகியோர் இணைந்து இந்த தொழில்நட்பத்தை கண்டுபிடித்துள்ளனர்.

அவர்கள், அறையிருந்து காற்றை உள்வாங்கும் ஏசி காற்று சீரமைப்பான் மேற்பகுதியில் 2 எல்இடி பல்புகளை பொருத்தியுள்ளனர். இந்த எல்இடி பல்புகளில் இருந்து வெளியேறும் புறஊதா ‘சி’ கதிர்வீச்சு பாக்டீரியா, வைரஸ் போன்ற கிருமிகளை அழிக்கிறது.

இது கரோனா வைரஸையும் அழிப்பதால் ஏசியைப் பயமின்றி பயன்படுத்த முடியும். இந்த காற்று சீரமைப்பானை பல்கலைக்கழகத் துணை வேந்தர் ராஜேந்திரன் அறிமுகப்படுத்தினார்.

பதிவாளர் குருமல்லேஷ் பிரபு, தேர்வுக் கட்டுப்பாட்டு நெறியாளர் (பொ) கண்ணபிரான், நிதி அலுவலர் கருணாநிதி, மருத்துவ அதிகாரி ஆனந்தி ஆலோசகர் தர்மலிங்கம், முனைவர் பாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இதுகுறித்து பல்கலைக்கழகத் துணைவேந்தர் ராஜேந்திரன் கூறுகையில், ‘‘தற்போதைய காலக்கட்டத்தில் ஏசி தவிர்க்க முடியாத ஒன்றாக மாறிவிட்டது. ஏசி காற்று சீரமைப்பான் மீது பொருத்தப்பட்ட எல்ஈடி பல்புகளில் வெளியேறும் குறுகிய அலை நீளம் (250 என்.எம்.) கொண்ட புற ஊதா சி கதிர்கள் 99 சதவீதம் பாக்டீரியா, வைரஸ்களை அழிக்கும் ஆற்றல் கொண்டது.

மேலும் புறஊதா ‘சி’ கதிர்வீச்சை காற்று சீரமைப்பானில் நன்றாக பாதுகாக்கப்படுவதால், மனிதர்கள் ஆரோக்கியத்தை பாதிக்காது. முதற்கட்டமாக பல்கலைக்கழக அலுவலகங்கள், ஆய்வகங்கள், கூட்ட அரங்குகளில் உள்ள ஏசிகளில் புதிய தொழில்நுட்ப காற்று சீரமைப்பானை பொருத்த உள்ளோம், என்று கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in