Published : 03 Sep 2020 06:15 PM
Last Updated : 03 Sep 2020 06:15 PM

வங்கிக் கடன் விவகாரம்: தீர்க்கமான நல்ல முடிவை மத்திய அரசு எடுக்க வேண்டும்; வாசன்

வங்கியில் வாங்கிய கடன் தொடர்பாக மத்திய அரசு நல்ல முடிவை எடுக்க வேண்டும் என, தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக, ஜி.கே.வாசன் இன்று (செப். 3) வெளியிட்ட அறிக்கை:

"ஊரடங்கு அறிவிக்கப்பட்டதால் மக்கள் வேலையில்லாமலும் வருமானம் இல்லாமலும் அவதியுறும் நிலையில், தாங்கள் வாங்கிய கடனுக்கு மாதத் தவணையைத் திரும்பச் செலுத்த கால அவகாசம் அளிக்கும்படி பல்வேறு தரப்பினரிடம் இருந்து கோரிக்கை எழுந்தது. அதன் அடிப்படையில் கடனுக்கான மாதத் தவணைத் தொகையை 6 மாத காலங்களுக்குப் பிறகு அளிக்கலாம் என்று மத்திய அரசின் வேண்டுகோளுக்கு இணங்க மத்திய ரிசர்வ் வங்கி விலக்கு அளித்து இருந்தது.

தற்போது அரசு வங்கிகளும் தனியார்துறை வங்கிகளும் சலுகை அளித்துள்ள 6 மாதத்திற்கும் வட்டிக்கு வட்டி கட்ட வேண்டும், அதோடு உனடியாக பணத்தைக் கட்ட வேண்டும் என்று நிர்பந்தம் செய்தது. அது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்குத் தொடரப்பட்டது.

அவ்வழக்கில் இன்று மத்திய அரசு பதில் அளித்தபோது வங்கிகள்தான் நாட்டின் பொருளாதாரத்தின் முதுகெலும்பாக உள்ளது. ஆகவே, வங்கிக் கடனுக்கான வட்டியைத் தள்ளுபடி செய்ய முடியாது. ஆனால், கடனுக்கான மாதத் தவனையைத் திரும்பச் செலுத்துவதற்காகப் பல தளர்வுகளை அளிக்க அரசு முடிவு செய்துள்ளது என்று கூறியுள்ளது. அதேபோல் வேளாண் கடன் உள்ளிட்டவற்றுக்கு தவணை நீண்ட காலம் நீட்டிக்கப்படும் என்று அறிவித்துள்ளது.

கடன்தாரர்கள் கடனை ஆகஸ்டு 31 ஆம் தேதிக்குள் செலுத்தாதவர்களை வாராக் கடன் பட்டியலில் சேர்க்கக் கூடாது. மறு உத்தரவு வரும் வரை வாராக்கடன் பட்டியலில் சேர்க்கக் கூடாது என்று இடைக்கால உத்தரவை உச்ச நீதிமன்றம் பிறப்பித்தது வரவேற்கத்தக்கது.

கடனுக்கான மாதத் தவணையைத் திரும்பச் செலுத்த கடன்தாரர்களுக்குப் பலவிதமான சங்கடமான சூழல் நிலவுகிறது. இந்த நேரத்தில் கடன் தொகையை வட்டியுடன் உடனே செலுத்த வேண்டும் என்று வங்கியின் சார்பாக நிர்பந்தம் செய்வது சரியல்ல.

வருமானம் இல்லாமல் அன்றாட வாழ்க்கைக்கே திண்டாடும்போது, அவர்களால் எவ்வாறு தவணையைத் திரும்பச் செலுத்த முடியும். இதனால் பலர் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர். இவற்றைக் கவனத்தில் கொண்டு கடனுக்கான மாதத் தவணையின் எண்ணிக்கையை அதிகரித்து பொதுமக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படாமலும், விவசாயக் கடனுக்கான மாதத் தவணை எண்ணிக்கையை அதிகரித்தும் சிறு, குறு நிறுவனங்களின் எதிர்காலம் பாதிக்கப்படாமலும் காக்க வேண்டியது மத்திய அரசின் கடமை.

நாட்டின் பொருளாதாரம் மீட்டெடுக்கப்பட வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. அதேசமயம் மக்களின் பொருளாதார நிலையையும் தொழில் நிறுவனங்களின் வருங்கால வளர்ச்சியையும் கவனத்தில் கொண்டு மத்திய அரசு ஒரு தீர்க்கமான நல்ல முடிவை எத்தரப்பு மக்களையும் குறிப்பாக ஏழை, எளிய மக்களைப் பாதிக்காதவாறு எடுக்க வேண்டும் என்றும் அவற்றை முறையாகத் தெளிவுபடுத்த வேண்டும் என்றும் தமிழ் மாநில காங்கிரஸ் சார்பாக கேட்டக்கொள்கிறேன்".

இவ்வாறு ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x