சாத்தான்குளம் தந்தை - மகன் வழக்கு: கோவில்பட்டி கிழக்கு காவல் நிலையத்தில் சிபிஐ அதிகாரிகள் விசாரணை

சாத்தான்குளம் தந்தை - மகன் வழக்கு: கோவில்பட்டி கிழக்கு காவல் நிலையத்தில் சிபிஐ அதிகாரிகள் விசாரணை
Updated on
1 min read

சாத்தான்குளம் தந்தை - மகன் உயிரிழந்தது தொடர்பாக கோவில்பட்டி கிழக்கு காவல் நிலையத்தில் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

சாத்தான்குளம் காவல் நிலைய போலீஸாரால் ஜூன் 19-ம் தேதி கைது செய்யப்பட்ட வியாபாரி ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர் கோவில்பட்டி கிளைச் சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர்.

இந்நிலையில் உடல் நலக்குறைவு காரணமாக கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் ஜூன் 22-ம் தேதி இரவு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட பென்னிக்ஸூம், 23-ம் தேதி அதிகாலை அனுமதிக்கப்பட்ட ஜெயராஜூம் அடுத்தடுத்து உயிரிழந்தனர். இச்சம்பவம் தொடர்பாக கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய ஆய்வாளர் சுதேசன் வழக்குப்பதிவு செய்திருந்தார்.

தமிழகம் முழுவதும் பலத்த அதிர்வலையை ஏற்படுத்தி இந்த பிரச்சினையில் சாத்தான்குளம் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் உள்ளிட்ட 10 பேர் சிபிசிஐடி போலீஸார் கைது செய்தனர். இந்த வழக்கை டெல்லி சிபிஐ ஏடிஎஸ்பி விஜயகுமார் சுக்லா தலைமையிலான குழுவினர் விசாரித்து வருகின்றனர்.

இந்நிலையில் இன்று மாலை 3 மணிக்கு சிபிஐ அதிகாரிகள் 2 பேர் கோவில்பட்டி கிழக்கு காவல் நிலையத்துக்கு வந்தனர். அங்கு, ஜெயராஜ், பென்னிக்ஸ் மரணம் தொடர்பாக கோவில்பட்டி கிளைச் சிறை அதிகாரி சங்கர் காவல் நிலையத்தில் அளித்த புகார் மனு மற்றும் கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய ஆய்வாளர் சுதேசன், நீதித்துறை நடுவர் விசாரணை வேண்டி அளித்த ஆவணங்கள், முதல் தகவல் அறிக்கை ஆகியவற்றை சிபிஐ அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

மேலும், ஜெயராஜ், பென்னிக்ஸ் பிரேத பரிசோதனையின்போது பணியில் ஈடுபட்டிருந்த கிழக்கு காவல் நிலைய காவலர்கள் சிவக்குமார், கார்த்திகேயன் ஆகியோரிடமும் கிழக்கு காவல் நிலைய ஆய்வாளர் சுதேசனிடமும் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

மேலும், மாவட்ட மருத்துவம் மற்றும் குடும்ப நலத் துறை துணை இயக்குனர் பொன் இசக்கி, துணை இயக்குனரின் உதவியாளர் முத்துவிநாயகம், அரசு மருத்துவமனை செவிலியர் வனஜா ஆகியோரிடமும் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இந்த விசாரணை இரவு 6 மணியை கடந்தும் நீடித்தது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in